டாக்கா: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியா வர மறுக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB), அதன் முன்னாள் பொதுச் செயலாளர் சையத் அஸ்ரஃபுல் ஹக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "போட்டியைப் புறக்கணித்தால் உலகக் கோப்பை வருவாயை இழக்க நேரிடும்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்கள் அணி இந்தியா செல்லாது என்றும், தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேசம் ஐசிசி-யிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தச் சூழலில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான சையத் அஸ்ரஃபுல் ஹக், வங்கதேச ஊடகமான 'தி டெய்லி ஸ்டார்'-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், போட்டி நடைபெறும் இடங்களை மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை ஐசிசி இடமாற்றத்திற்கு மறுத்து, அதனால் வங்கதேசம் தொடரிலிருந்து விலக முடிவெடுத்தால், உலகக் கோப்பை வருவாயில் வங்கதேசத்திற்குச் சேர வேண்டிய பங்குத் தொகை கிடைக்காது போக வாய்ப்புள்ளது."
"வங்கதேசம் எடுக்கும் இத்தகைய முடிவு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) நேரடி மோதலுக்கு வழிவகுக்கும். இது எதிர்கால உறவுகளைப் பாதிக்கும். பாதுகாப்புக் காரணங்களை வங்கதேசம் முன்வைப்பதால், 'வங்கதேச வீரர்களுக்கு அரசுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயரிய பாதுகாப்பை நாங்கள் வழங்குகிறோம்' என்று இந்திய அரசு உறுதியளிக்க வாய்ப்புள்ளது. அப்படி இந்தியா சொல்லிவிட்டால், பந்து மீண்டும் வங்கதேசத்தின் பக்கமே திரும்பும். அப்போது இந்தியா செல்வதைத் தவிர வங்கதேசத்திற்கு வேறு வழியிருக்காது" என்று அஸ்ரஃபுல் ஹக் கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதே இந்தப் பிரச்சினையின் ஆரம்பமாகும். பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின் பேரில் அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்தது. முஹம்மது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு, "முஸ்தபிசுர் நீக்கப்பட்டதற்குக் காரணமான தர்க்கரீதியான விளக்கம் எதுவும் பிசிசிஐ தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.