பாலக்கலே: இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை, முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பிட்ஸ் & பீசஸ் என்று விமர்சித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை ஆட்டம் இன்று நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் இடம்பெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் யார் என்பதில் தான் அதிக குழப்பம் நீடித்து வருகிறது. ஏனென்றால் பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரை பிளேயிங் லெவனில் எடுத்தால், இந்திய அணி பேட்டிங் வரிசை ஜடேஜாவுடன் நின்றுவிடும்.

இதனால் சிராஜ் அல்லது ஷமியை பெஞ்ச் செய்துவிட்டு அந்த இடத்தில் ஷர்துல் தாக்கூரை களமிறக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மோசமான சூழல்களில் பேட்டிங் செய்த அனுபவம் ஷர்துல் தாக்கூருக்கு அதிகமுண்டு. இதனால் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை கூடுதல் வலுப்பெறும் நிலை உள்ளது. ஆனால் ரோகித் சர்மா என்ன முடிவு எடுத்துள்ளார் என்று இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், ஆசியக் கோப்பை மட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரிலும் சிராஜ், ஷமி மற்றும் பும்ராவுடன் தான் இந்திய அணி களமிறங்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் மூவரும் 10 ஓவர்களை வீசுவதன் மூலம் ஆட்டத்தை மொத்தமாக இந்திய அணியின் பக்கம் திருப்பும் வல்லமை கொண்டவர்கள். தனியாளாக வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும்.
ஆனால் ஷர்துல் தாக்கூர் அப்படியான வீரர் அல்ல. அவர் ஷர்தில் பாண்டியாவை போல் ஒரு பந்துவீச்சாளர் தான். பிட்ஸ் & பீசஸ் என்று சொல்வார்கள். அப்படியான ஒரு வீரர் தான் ஷர்துல் தாக்கூர் என்று விமர்சித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது ஜடேஜாவை பிரபல வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர், பிட்ஸ் & பீசஸ் என்று விமர்சித்தார். அதன்பின்னரே அவரின் எழுச்சி அதிகமானது. இதனால் வரும் நாட்களில் தாக்கூரின் எழுச்சி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.