சிறப்பான சுப்மன் கில்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் விளையாடி 259 ரன்களை அடித்துள்ளார் சுப்மன் கில். இதில் 2 அரைசதங்கள் அடக்கம். காப்பாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 9 ரன்களில் சதத்தை தவறவிட்டார் கில். இவரது இந்த ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
சுப்மன் கில் இடம்பிடிப்பு
இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் கில் இடம்பெற்றுள்ளார். இதையொட்டி கடந்த புதன்கிழமை இவர் சென்னை வந்துள்ளார். தற்போது குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடர் கொடுத்த தன்னம்பிக்கையுடன் தற்போதைய இங்கிலாந்து தொடரை எதிர்கொள்ளவுள்ளார் கில்.
கம்பீர் பாராட்டு
இந்நிலையில் சுப்மன் கில் அதிகமான திறமைகளை கொண்டுள்ளதாக முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கம்பீர் அறிவுறுத்தல்
ஆனால் அவர் தனது பேட்டிங்கை மேலும் சிறப்பாக்கிக் கொள்ள அவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்த இளம் வயதில் அவர்மீது அதிகமான எதிர்பார்ப்பையும் அதிகமான நெருக்கடிகளையும் திணிப்பது நல்ல பலனை தராது என்றும் அவர் கூறியுள்ளார்.