இந்தியாவில் ஒலிம்பிக் தொடர் நடப்பதில் சிக்கல்.. ஊக்கமருந்து சோதனை குறித்து ஐடிஏ குற்றச்சாட்டு
டெல்லி: இந்தியாவில் ஊக்கமருந்து சோதனை அதிகாரிகளைக் கண்டாலே விளையாட்டு வீரர்கள் ஓட்டம் பிடிப்பதாக சர்வதேச சோதனை முகமையின் தலைவர் பெஞ்சமின் கோஹன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, சோதனை நடப்பதற்கு முன்பாகவே வீரர்களுக்கு ரகசியமாகத் தகவல் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் 2036 ஒலிம்பிக் கனவு தீவிரமாக இருக்கும் நிலையில், இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உலக அரங்கில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஒலிம்பிக் மற்றும் பிற முக்கிய உலகளாவிய விளையாட்டுத் தொடர்களில் ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கைகளை நிர்வகிக்கும் அமைப்பான சர்வதேச சோதனை முகமை (ITA), இந்தியாவில் ஊக்கமருந்து பயன்பாடு அதிக அளவில் இருப்பது குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் பெஞ்சமின் கோஹன், "இந்தியா 2036 ஒலிம்பிக் போட்டிகளைத் தன் நாட்டில் நடத்த விரும்பினால், முதலில் விளையாட்டுக் கட்டமைப்பிலும் நிர்வாகத்திலும் ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்" என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வரும்போது விளையாட்டு வீரர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடுவதாகவும், பரிசோதனைக்கு முன்பாகவே அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருவதாக பெஞ்சமின் கோஹன் கவலை தெரிவித்தார். சமீபத்தில் இத்தாலியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் போது, இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது சர்வதேச அமைப்புடன் இணைந்து செயல்பட இந்திய அமைப்புகள் சற்று தயக்கம் காட்டுவது தெரிந்தது. தங்களது சொந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் வெளிநாட்டு அமைப்பிடம் தஞ்சமடைவதாக மக்கள் கருதுவார்களோ என்ற அச்சமே அந்தத் தயக்கத்திற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஊக்கமருந்து பயன்படுத்தும் வீரர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த மாநாட்டில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் விட்டோல்ட் பாங்கா, உலகில் அதிக அளவில் செயல்திறனை அதிகரிக்கும் ஊக்கமருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தியா 2030 காமன்வெல்த் போட்டிகள் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கத்தார் நாட்டின் தோஹா நகரமும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தப் போட்டியிடுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், உலக அரங்கில் இந்திய வீரர்கள் மீது வைக்கப்படும் இந்த ஊக்கமருந்து குற்றச்சாட்டுகள் இந்தியாவின் ஒலிம்பிக் கனவுக்கும் நற்பெயருக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. இதை இந்திய விளையாட்டுத்துறை எப்படிச் சமாளிக்கப் போகிறது?.


Click it and Unblock the Notifications
