மும்பை: செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை 2025 தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய டைட்டில் ஸ்பான்சராக இருந்த பிரபல பேண்டஸி விளையாட்டு செயலியான 'ட்ரீம்11' தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுடன் தற்போது சட்டமாகியுள்ளது. "ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025" என்ற இந்த புதிய சட்டத்தின்படி, உண்மையான பணத்தை வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த புதிய சட்டத்தின் எதிரொலியாகவே ட்ரீம்11 நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியக் கோப்பைக்காக இந்திய வீரர்களின் ஜெர்சிகள் அனைத்தும் ட்ரீம்11 லோகோவுடன் ஏற்கனவே அச்சிடப்பட்டுவிட்டன. ஆனால், இந்த திடீர் விலகல் காரணமாக, அந்த ஜெர்சிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 4 அல்லது 5-ஆம் தேதிகளில் இந்திய அணி துபாய் புறப்படவுள்ள நிலையில், குறுகிய காலத்தில் புதிய ஸ்பான்சரை கண்டுபிடிப்பது கடினம். இதனால், ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, பைஜூஸ் நிறுவனத்திற்குப் பதிலாக, ட்ரீம்11 நிறுவனம் இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை ரூ.358 கோடிக்கு கைப்பற்றியது. உள்நாட்டில் நடக்கும் போட்டிக்குத் தலா 3 கோடி ரூபாயும், வெளிநாட்டுப் போட்டிக்குத் தலா 1 கோடி ரூபாயும் வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா கூறுகையில், "நாங்கள் நாட்டின் எந்தச் சட்டத்தையும் மீற மாட்டோம். மத்திய அரசு வகுத்துள்ள ஒவ்வொரு கொள்கையையும் பிசிசிஐ பின்பற்றும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புதிய ஸ்பான்சருக்கான ஒப்பந்தப் புள்ளிகளை பிசிசிஐ விரைவில் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆசியக் கோப்பை போன்ற ஒரு முக்கிய தொடருக்கு முன்னதாக டைட்டில் ஸ்பான்சர் விலகியிருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.