அந்த தம்பி வேண்டாம்.. அவரு நிறைய கத்துக்கணும்..! சும்மா இருக்கிற இவருக்கு சான்ஸ் கொடுங்க
மும்பை: 2வது டெஸ்ட் போட்டிக்கு, சாஹாவை, ரிஷப் பன்டுக்கு தேர்வு செய்யலாம் என்று முன்னாள் வீரர் கிர்மானி கூறியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட சாஹாவுக்கு காயம் ஏற்பட்டதால், ரிஷப் பன்ட் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரிஷப் பன்டை 3 வகை கிரிக்கெட்டிலும் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உருவாக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒட்டுமொத்த போட்டிக்கும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். 2 போட்டிக்கான டெஸ்ட் அணியில் சாஹா தான் மாற்று வீரராக இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பன்டின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்து வருகின்றன.

வீணான வாய்ப்புகள்
போட்டிக்கான இளமை இருந்தும், போதிய அனுபவம் இல்லாததால் பலமுறை கொடுத்த வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்து உள்ளன. எனவே, அவருக்கு பதிலாக மாற்று வீரரை கொண்டு வருமாறும் கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

சாஹா சரியானவர்
இந்நிலையில் 2வது போட்டியில் சாஹா விக்கெட் கீப்பராக பணியாற்ற தகுதியானவர் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ரிஷப் பன்ட் இன்னும் தொடக்க நிலையிலேயே இருக்கிறார்.

எளிதான பணியல்ல
அவர் கடவுள் கொடுத்த வரம். ஆனால் கிரிக்கெட்டில் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். விக்கெட் கீப்பர் பணி என்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் கடினமான பணி. கைகளில் கிளவுஸ் அணிந்தவர் எல்லாம் கீப்பராக பணியாற்றிட முடியாது.

பயன் என்ன?
துரதிருஷ்டவசமாக சாஹா காயம் அடைந்தார். ஆகையால், ஓராண்டுக்கு மேல் விளையாட முடியாத நிலை உருவானது. அவருக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும். நீங்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால், அவரை அணியில் வைத்திருப்பதின் பயன் என்ன? என்றார்.


Click it and Unblock the Notifications