ஐசிசி விதிகளை அப்பட்டமாக மீறிய ஏமாற்றுக்கார ஸ்மித்.. தெரியாமல் செய்துவிட்டதாக இப்போது புலம்பல்
பெங்களூர்: நடுவரின் முடிவை எதிர்த்து டி.ஆர்.எஸ் அப்பீல் செய்வதில் மோசடி செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் அது தப்புதான் என ஒப்புக்கொண்டார்.
இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின், 2வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடந்து வந்தது.
முதல் இன்னிங்சில் சொதப்பினாலும், 2வது இன்னிங்சில் போராடிய இந்திய அணி கவுரமான ஸ்கோரை எட்டி, ஆஸ்திரேலிய அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஸ்மித் அச்சுறுத்தல்
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபடி இருந்தது. மறுமுனையின் கேப்டன் ஸ்மித் மட்டும் அச்சுறுத்தும்படியாக ஆடிக்கொண்டிருந்தார்.

எல்.பி.டபிள்யூ
இந்நிலையில் ஸ்மித் 28 ரன்கள் எடுத்திருந்தபோது, உமேஷ் யாதவ் பந்து வீச்சில், எல்.பி.டபிள்யூ ஆனார். டி.ஆர்.எஸ் எனப்படும் நடுவர் முடிவை மறுபரிசீலனை கோரும், வாய்ப்பு அப்போது ஆஸி.க்கு 1 மட்டுமே எஞ்சியிருந்தது.

ஏமாற்று வித்தை
இந்த வாய்ப்பை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதை சம்மந்தப்பட்ட பேட்ஸ்மேன்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஸ்மித்தோ, சில வினாடிகள் தாமதத்திற்கு பிறகு, அப்படியே திரும்பி பெவிலியனை நோக்கினார். அங்கு அமர்ந்திருந்த சக வீரர்களை அவர் பார்த்தார். அவர்கள் ஓ.கே. என கூறினால் டி.ஆர்.எஸ் அப்பீலுக்கு போகலாம் என்பது ஸ்மித் கணக்கு.

மட்டமான செயல்
பெவிலியனில் அமர்ந்துள்ள வீரர்கள் டிவியில் எல்.பி.டபிள்யூ காட்சியை பார்த்திருப்பர். எனவே அவர்கள் கூறுவது சரியாக இருக்கும் என்று கணக்கு போட்டார் ஸ்மித். ஆனால் இவ்வாறு ஆடுவது மகா மட்டமான ஒரு கள்ள ஆட்டம். ஐசிசி விதிமுறைகளுக்கும், கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் தனத்திற்கும் எதிரானது.

விரட்டியடித்த நடுவர்
ஸ்மித்தின் செய்கையை முதலில் கண்டுபிடித்தது கள நடுவர் நிகல் லியோங்தான். உடனே ஸ்மித்தை நோக்கி விரைந்து வந்த அவர், "என்ன செய்கிறீர்கள்" என்பதை போல கேள்வி எழுப்பி, வெளியே போகுமாறு கூறினார். ஸ்மித்துக்கு வேறு வழியில்லை. அதற்குமேல் அப்பீல் செய்தால் அதை நடுவர் ஏற்கப்போவதில்லை என்பதை தெரிந்து கொண்டு தலையை தொங்க போட்டுக்கொண்டு வெளியேறினார்.

கோஹ்லி கோபம்
இதை பார்த்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கடும் கோபமடைந்தார். நடுவரிடம் சென்று, இது முறைகேடு என்று புகார் தெரிவித்தார். போட்டிக்கு பிறகு அளித்த பேட்டியிலும், இதுகுறித்து போட்டி ரெஃப்ரியிடமும் புகார் அளிக்க போவதாக கோஹ்லி கோபத்தோடு தெரிவித்தார்.

மறந்துவிட்டாராம்
இந்நிலையில், ஸ்மித் அளித்த பேட்டியில், ஏதோ நினைவுதடுமாறி பெவிலியன் பக்கம் பார்த்துவிட்டதாகவும், அது தவறுதான் என்றும் கூறியுள்ளார். முதல் முறையாக இப்படி ஒருதவறை இழைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது வெற்றிக்காக எதையும் செய்ய கூடியவர்கள் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. ஏமாற்றுக்காரர் என்ற பெயர் பெற்றுவிட்டார் ஸ்மித். அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுவதற்கு ஸ்மித்துக்கு ஐசிசி தடை விதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications