சண்டிகர்: ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியுடன் விளையாட சண்டிகர் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கிய தாஜ் ஹோட்டலில் குடிபோதையில் இருந்த போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 13-ம் தேதி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது. இதற்காக பஞ்சாப் சென்ற சென்னை அணி சண்டிகரில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தது. அப்போது அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட போலீசார் குடிபோதையில் தள்ளாடியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தால் சண்டிகர் போலீசாரின் கடமை உணர்வும், நம்பகத்தன்மையும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏட்டு தர்ஷன் சிங் என்பவர் சாராயக்கடைக்கு வெளியே தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்த மறுநாள் சப்-இன்ஸ்பெக்டர் பூட்டா சிங் மற்றும் ஏட்டு பரம்ஜித் சியங் ஆகியோர் ஹோட்டலுக்கு வெளியே பணியில் இருந்தபோது மது அருந்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது குறித்து டிஎஸ்பி ரோஷன் லால் கூறியதாவது,
கடந்த 12-ம் தேதி இரவு ஹோட்டலுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடிபோதையில் இருந்ததை அப்போது ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் கண்டுபிடித்தார்.
அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் ரத்தத்தில் மது இருந்தது உறுதியானது. இதையடு்தது அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்றார்.
காயம் அடைந்த ஏட்டு தர்ஷனும் சென்னை அணியின் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது பணியைச் செய்யாமல் மதுக் கடைக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அவருடன் மற்ற இரண்டு போலீசாரும் சென்றதாகக் கூறப்படுகின்றது.