பர்மிங்ஹாம்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் வெறும் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் முடிவுக்கு வந்தது. இதனால் இங்கிலாந்து அணி 35 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் உள்ளது.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்து களத்தில் இருந்தது. உஸ்மான் கவாஜா 126 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், கவாஜா 141 ரன்களுக்கு ராபின்சன் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கம்மின்ஸ் மட்டும் 38 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணி தரப்பில் பிராட் மற்றும் ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
3ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி பிரம்மாண்ட ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் செஷனிலேயே ஆஸி. அணி ஆல் அவுட்டாகியது. இதன்பின்னர் இங்கிலாந்து அணி களமிறங்கி 4 ஓவர்கள் வீசப்பட்ட சூழலில், மழை குறுக்கிட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கு பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், கம்மின்ஸ் வீசிய பந்தில் டக்கெட் 19 ரன்களிலும், போலாந்த் பந்துவீச்சில் கிராலே 7 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து ரூட் - போப் கூட்டணி சில பந்துகளை எதிர்கொண்ட நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 3ஆம் நாளில் வெறும் 35 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், முதல் போட்டி டிராவில் முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. 4ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போதுமான ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தாலோ அல்லது ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் செய்தாலோ மட்டுமே ஆட்டத்தில் முடிவு ஏற்படும். இதனால் 4ஆம் நாள் ஆட்டத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.