சென்சுரியன்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 408 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதன் மூலம் அந்த அணி 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 101 ரன்கள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 3ஆம் நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. டீன் எல்கர் 140 ரன்களுடனும், யான்சன் 3 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். முதல் செஷனில் இந்திய அணி நிச்சயம் சில விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு பேட்ஸ்மேன்கள் நங்கூரமிட்டு பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.
இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் டீன் எல்கர் இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் 186 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் வந்த கோட்சியே அஸ்வின் பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே மார்கோ யான்சன் அரைசதம் அடித்து அதிரடியாக ரன்களை குவித்தார்.
பின்னர் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்திருந்த நிலையில் உணவு இடைவேளை விடப்பட்டது. பின்னர் வந்த ரபாடா 1 ரன்னிலும், பர்கர் ரன் ஏதும் எடுக்காமலும் பும்ரா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 408 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி வரை களத்தில் இருந்த மார்கோ யான்சன் 84 ரன்கள் சேர்த்திருந்தார்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 163 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. சென்சுரியன் மைதானத்தில் 163 ரன்கள் முன்னிலையை கடந்து இந்திய அணி ரன்கள் குவிக்க வேண்டும் என்பதால், இந்திய வீரர்கள் அனைவரும் இணைந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.