குயானா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மாவை அரைசதம் அடிக்கவிடாமல் போட்டியை முடித்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணிக்காக அறிமுகமான முதல் டி20 தொடரிலேயே அனுபவம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் இளம் வீரரான திலக் வர்மா. இவரின் வருகையால் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேவை தீர்ந்துள்ளதோடு, நிலைத்து நின்று தேவைக்கேற்ப அதிரடியாக ஆடுவதிலும் வல்லவராக உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே 22 பந்துகளில் 39 ரன்கள் விளாசிய திலக் வர்மா, 2வது டி20 போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் இந்திய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் திலக் வர்மாவை பாராட்டினர்.
இந்த நிலையில் 3வது டி20 போட்டியின் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போது மிகவும் அழுத்தமான சூழலில் திலக் வர்மா களமிறக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவின் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தாலும், மறுபக்கம் விக்கெட் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார் திலக் வர்மா.
பின்னர் சூர்யகுமார் யாதவ் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து திலக் வர்மா ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அந்த நேரத்தில் திலக் வர்மா 47 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் திலக் வர்மா நிச்சயம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 18வது ஓவரின் முதல் 4 பந்திலும் 4 சிங்கிள் சேர்க்கப்பட்டது. இதனால் திலக் வர்மா 49 ரன்களில் இருந்தார். அப்போது பேட்டிங் ஹர்திக் பாண்டியாவுக்கு செல்ல, திடீரென சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்தார். இதனால் திலக் வர்மாவால் அரைசதத்தை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் இந்திய அணிக்காக முதல் 3 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் திலக் வர்மா சூர்யகுமார் யாதவுடன் இரண்டாவது இடத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.