கொழும்பு: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷாகீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃபின் அபார பந்துவீச்சால் 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்று அசத்தியுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை மண்ணில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இந்திய அணியை வீழ்த்த இலங்கை ஆடுகளங்களில் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த பயிற்சியாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதில் சிறப்பாக ஆடிய இமாம் உல் ஹக் 61 ரன்களும், ஷடாப் கான் 39 ரன்களும் சேர்த்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் மற்றும் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
எளிதான இலக்கு என்பதால், ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோர் வெறித்தனமாக பந்துவீசினார்கள். ஷாகீன் வீசிய 3வது ஓவரிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்த ஓவரில் 3வது விக்கெட்டையும் இழந்தது. இதனால் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, கால்பந்து ஸ்கோரை போல் ரன் மாறியது.
தொடர்ந்து களமிறங்கிய எந்த பேட்ஸ்மேனும் இவர்கள் மூவருக்கு முன் நிற்க முடியவில்லை. அதிகபட்சமாக குர்பாஸ் 18 ரன்களும், ஓமர்சாய் 16 ரன்களும் சேர்த்தனர். இறுதியாக 19.2 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 59 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகளையும், ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி குறைந்தது 2 போட்டிகளிலாவது ஆட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சிற்கு இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சவால் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.