சென்னை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. ஜாகீர் கான் இர்ஃபான் பதான் போன்ற வீரர்களுக்கு பிறகு இந்திய அணியில் பெயர் சொல்லும் அளவு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை.
பாகிஸ்தான்,ஆஸ்திரேலிய போன்ற அணிகள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு எதிரணி பேட்ஸ்மன்களுக்கு சிக்கல்களை தருகிறது. இந்த நிலையில் டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ஆர்ஸ்தீப் சிங்கை பயன்படுத்த பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது.

ஆனால் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகமாகி அபாரமாக செயல்பட்ட தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தற்போது பிசிசிஐ வாய்ப்பு கொடுக்கவில்லை. 33 வயதான நடராஜன் இன்னும் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த டி என் பி எல் தொடரில் கூட திருச்சி அணிக்கு எதிராக ஆறு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேபோன்று நெல்லை அணிக்கு எதிராக 36 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும், சேலம் அணிக்கு எதிராக 3 ரன்கள் விட்டு கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் நடராஜன் வீழ்த்தி இருந்தார். எட்டு போட்டுகளில் விளையாடிய நடராஜன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
நடராஜன் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அவர் இந்திய அணிக்கு விளையாடி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சூழலில் இருக்கிற வீரர்களை எல்லாம் வைத்து துலீப் கோபைக்கான அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. இதில் பல வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.
அடிக்கடி காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட உம்ரான் மாலிக், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் எல்லாம் இடம் பெற்றிருந்தார். ஆனால் நல்ல உடல் தகுதியுடன் தனது திறமையை நிரூபித்து இருக்கும் நடராஜன் துலீப் கோப்பையில் கூட பிசிசிஐ சேர்க்காதது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.