ஆலூர்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் பல மாற்றங்கள் நிகழ இருக்கிறது.
அதன் முதல் படியாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நட்சத்திர வீரர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய சர்பிராஸ்கான் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் துலீப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் மத்திய பிராந்திய அணியும், மேற்கு பிராந்திய அணியும் பலப்பரிட்சை நடத்தியது. இதில் மேற்கு பிராந்திய அணியில் பிரித்வி ஷா, பிரியாங் பஞ்சால், சூரியகுமார் யாதவ், சப்ராஸ்கான் என்ற நட்சத்திர வீரர்கள் அடங்கியிருந்தனர். இந்திய அணையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் புஜாரா முதல் போட்டியில் தற்போது விளையாடுகிறார்.
மேலும் பிரித்விஷாவும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறார். சூரியகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என நம்புகிறார். இதனால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனினும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கு அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மத்திய பிராந்திய அணியில் பந்துவீச்சை பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

குறிப்பாக சிவம் மவி சிறப்பாக பந்து வீசி அசத்தினார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிதிவிஷா 54 பந்துகளை எதிர் கொண்டு 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிரியாங் பாஞ்சால் 13 ரன்களில் வெளியேற அனுபவ வீரர் புஜாரா 102 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் 13 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சர்பிராஸ்கான் இந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதில் புஜாரா, சர்பிராஸ்கான், சூரியகுமார் யாதவ் என மூன்று முக்கிய வீரர்களின் விக்கெட்டை சிவம் மவி வீழ்த்தி அசத்தினார். 70 ஓவர் முடிவில் மேற்கு பிராந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.