மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தற்போது அதிரடி ஆல்ரவுண்டராக அக்சர் பட்டேல் விளங்கி வருகிறார். டி20 உலக கோப்பையில் இந்திய அணி தடுமாறிய போது கூட அக்சர் பட்டேல் தான் அணியின் மானத்தை காப்பாற்றினார். இந்த நிலையில் அக்சர் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிகவும் முக்கிய இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜடேஜா தற்போது வயதாகி வருவதால் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல், தன்னுடைய இடத்தை உறுதி செய்ய துலீப் கோப்பை, ஒரு வாய்ப்பாக அவருக்கு அமைந்தது. இந்திய சி அணி, இந்திய டி அணிகளுக்கு இடையிலான துலீப் கோப்பை முதல் சுற்று போட்டிகள் ஆந்திராவில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய டி அணியில் யாஷ் துபே 10 ரன்களிலும், அதர்வா தாய்டே நான்கு ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களிலும், தேவுதட் படிக்கல் டக் அவுட்டும், ரிக்கி பியூ நான்கு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎஸ் பரத் 13 ரன்களில் வெளியேறினார்.
இதனால் இந்திய டி அணி 48 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்திய டி அணி சொற்ப ரன்களில் சுருள போகிறது என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது களத்திற்கு வந்த அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அக்சர்பட்டேல் தனி ஆளாக நின்று இந்திய டி அணியின் பேட்டிங்கை காப்பாற்றினார்.
அக்சர் பட்டேலை ஆட்டமிழக்க வைக்க இந்திய சி அணி பவுலர்கள் கடுமையாக போராடினர். ஆனால் அக்சர் பட்டேல் தமக்கு பந்துவீச்சு மட்டுமல்ல பேட்டிங்கும் நன்றாக வரும் என்பதை டெஸ்ட் கிரிக்கெட்டில் காண்பித்தார். 78 பந்துகளில் அரைசதம் கடந்த அக்சர் பட்டேல், தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 86 ரன்களில் அவர் வெளியேறினார். இதில் ஆறு பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். அக்சர் பட்டேல் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகபட்சம் ஸ்கோர் என்றால் வெறும் 13 ரன்கள் தான்.இதனால் அக்சர் பட்டேல், இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய டி அணி 164 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஜடேஜாவின் இடத்திற்கு ஆபத்து வந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.