மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் இளம் வீரருமான ருதுராஜ் கெய்க்வாட் தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது அவருடைய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பல பேர் இருந்தும், அவர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.
குறிப்பாக ருதுராஜ் டி20, ஒருநாள் போட்டிகளில் தமக்கு கிடைத்த வாய்ப்பை ஓரளவுக்கு சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்கு போதிய ஆதரவை கொடுத்து போதிய போட்டிகளில் வாய்ப்பு வழங்கியிருந்தால் இந்நேரம் மிகப்பெரிய ஒரு வீரராக சர்வதேச அளவில் திகழ்ந்திருப்பார்.

ஆனால் ஐபிஎல் போன்ற போட்டிகளில் எல்லாம் ருதுராஜ், தன்னுடைய திறமையை நிரூபித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். ஆனால் ருதுராஜ், அதே போன்ற வாய்ப்பு சர்வதேச கிரிக்கெட்டில் கிடைப்பதில்லை. மேலும் ருதுராஜ் போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு தர வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் தான் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் இந்திய சி அணியின் கேப்டனாக ருதுராஜ் களமிறங்கினார். இந்திய டி அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ருதுராஜ் கேப்டனாக பவுலர்களை சுழற்சி முறையில் நல்ல விதமாக பயன்படுத்தினார்.
இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி அணி 164 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. அதிகபட்சமாக அக்ஸர் பட்டேல், 86 ரன்கள் விளாசினார். இதனை அடுத்து இந்திய சி அணியில் பேட்டிங் களமிறங்கியது. இதில் ருதுராஜ் அபாரமாக விளையாடி ரன்களை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்க ஹர்ஷித் ரானா அபாரமாக செயல்பட்டு ருதுராஜ்க்கு அதிர்ச்சி அளித்தார். 19 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் ஐந்து ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து ஐந்து பந்துகள் இடைவெளியில் சாய் சுதர்சன் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.
சாய் சுதர்சன் 16 பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் இந்திய சி அணி 14 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. துலீப் கோப்பையில் தன்னுடைய திறமையை நிரூபித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சோகமே ஏற்பட்டிருக்கிறது.