பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்திய ஹர்சித் ராணா, அவர் பெவிலியன் நோக்கி நடந்து சென்ற போது ஃபிளையிங் கிஸ் கொடுத்து கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் ஹர்சித் ராணாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
துலீப் டிராபி தொடரில் இந்தியா சி அணியை எதிர்த்து இந்தியா டி அணி விளையாடி வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய டி அணி விஜய்குமார் வைஷாக் பவுலிங்கால் வெறும் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணி தரப்பில் அக்சர் படேல் மட்டும் அபாரமாக விளையாடி 86 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் 15 ரன்களை கூட எட்டவில்லை.

இதன்பின் இந்தியா சி அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் - சாய் சுதர்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சாய் சுதர்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்சித் ராணா வீசிய பவுலிங் இன் ஸ்விங்காகி உடலை நோக்கி வர, அதனை எதிர்கொள்ள ருதுராஜ் கெய்க்வாட் முயற்சித்தார்.
அது நேராக 2வது ஸ்லிப் திசையில் நின்ற அதர்வா தய்டேவிடன் கைகளில் சென்று விழுந்தது. இதனால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அதனை பார்த்த இந்தியா டி அணி வீரர் ஹர்சித் ராணா, தனது ஸ்டைலில் ஃபிளையிங் கிஸ் கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது.
இது சிஎஸ்கே ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் போது கேகேஆர் அணிக்காக விளையாடிய ஹர்சித் ராணா, ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய பின் அவர் முகத்திற்கு முன்பாகவே ஃபிளையிங் கிஸ் கொடுத்து கொண்டாடினார்.
இதனால் மயங்க் அகர்வால் களத்திலேயே டென்ஷனாகினார். இதனைத் தொடர்ந்து ஹர்சித் ராணாவிற்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கேகேஆர் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருந்தது.
இருந்தாலும் இந்திய அணியின் சீனியர் வீரரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். தற்போது மீண்டும் ஹர்சித் ராணா சீனியரான ருதுராஜ் கெய்க்வாட்-டிடம் ஃபிளையிங் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் ஹர்சித் ராணாவின் நடவடிக்கையில் மாற்றம் தேவை என்று ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.