மும்பை: 2024 துலீப் ட்ராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அளவிலான டெஸ்ட் வீரர்களை நான்கு அணிகளாக பிரித்து இந்த டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி அபாரமாக செயல்பட்டு இரண்டு போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியாக துலீப் ட்ராபி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மூன்று சுற்றுப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோதும்.

இதன் முடிவில் எந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த புள்ளிப் பட்டியலில் எப்படி புள்ளிகள் வழங்கப்படுகின்றன என்பதை பார்ப்போம். ஒரு அணி இன்னிங்ஸ் வெற்றி அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 7 புள்ளிகள் வழங்கப்படும். நான்கு இன்னிங்ஸ்கள் ஆட்டம் நடந்து முடிந்த பின் ஒரு அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்.
போட்டி டிரா ஆகும் பட்சத்தில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி டிரா ஆகும் நிலையில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறாத அணிக்கு ஒரு புள்ளி மட்டும் வழங்கப்படும். தோல்வி அடையும் அணிகளுக்கு எந்த புள்ளிகளும் வழங்கப்படாது. அதன் அடிப்படையில் நான்கு அணிகளும் எத்தனை புள்ளிகள் பெற்று இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
இந்தியா சி அணி, இந்தியா டி அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் மூலம் அந்த அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தது. அடுத்த இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 525 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்தியா பி அணி 332 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்தியா சி அணி முன்னிலை பெற்றது.
இந்த போட்டி டிரா ஆனதால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இந்தியா சி அணிக்கு மூன்று புள்ளிகள் வழங்கப்பட்டன. இரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா சி அணி 9 புள்ளிகள் உடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி முதல் போட்டியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இருந்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா சி எனக்கு எதிராக டிரா செய்தது. அதன் மூலம் மொத்தமாக 7 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியா ஏ அணி முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா டி அணியை 186 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதன் மூலம் அந்த அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்தியா டி அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா சி மற்றும் இந்தியா ஏ அணிகளிடம் தோல்வி அடைந்து, எந்த புள்ளிகளும் பெறாத நிலையில் நான்காவது இடத்தில் உள்ளது. தற்போது மூன்றாவது போட்டியில் இந்தியா சி அணி இந்தியா ஏ அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றாலே இந்தியா சி அணி 2024 துலீப் ட்ராபி தொடரை கைப்பற்றி விடும். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இது முக்கியமான வெற்றியாகவும் அமையும்.