மும்பை: இந்திய அணியின் வருங்கால நட்சத்திரமாக அறியப்படும் ரிங்கு சிங் தன்னை ஒட்டுமொத்தமாக இந்திய அணியில் இருந்தே புறக்கணித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது உள்ளூர் டெஸ்ட் போட்டி பேட்டிங் சராசரி அதிகமாக இருப்பதாகவும், தான் டெஸ்ட் அணியில் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் பேசி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் தன்னை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு கவனிக்கவில்லை, தனக்கு சரியாக வாய்ப்பளிக்கவில்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 2024 டி20 உலகக் கோப்பை அணியில் ரிங்கு சிங் நிச்சயம் இடம் பெறுவார் என்று அனைவரும் எண்ணினர். ஆனால், அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

அப்போது சாக்கு போக்குகள் சொல்லி ரிங்கு சிங் வெளியே அமர வைக்கப்பட்டார். ரிங்கு சிங்கின் உள்ளூர் டெஸ்ட் போட்டி சராசரி அதிகமாகவே உள்ளது. ஆனால், இதுவரை அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பிசிசிஐ நடத்தும் உள்ளூர் டெஸ்ட் தொடர் ஒன்றிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்து நடைபெற உள்ள வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் சிறந்த டெஸ்ட் வீரர்களை உள்ளடக்கிய துலீப் ட்ராபி தொடர் நடைபெற உள்ளது. அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்தத் தொடரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று இருக்கும் நிலையில், ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவரது உள்ளூர் டெஸ்ட் போட்டி சராசரி 55 ஆக உள்ளது. அப்படி இருந்தும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பெறக்கூடாது என்ற எண்ணத்தில் இப்படி ஒதுக்கப்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரிங்கு சிங், தான் டெஸ்ட் அணியில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், தனது உள்ளூர் டெஸ்ட் போட்டி சராசரி 55 என்றும் கூறியிருக்கிறார். இப்போதாவது பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு அளிக்குமா?