மும்பை : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சுற்று இன்று தொடங்கியது. இதில் பல முன்னணி வீரர்கள் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக கில்,கேஎல் ராகுல், அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் தற்போது சென்னைக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.
அங்கு இந்திய அணி வீரர்களுக்கு ஐந்து நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் ருதுராஜ் தலைமையிலான இந்திய சி அணியும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய பி அணியும் ஆந்திர மாநிலம் அனத்தன்பூர் என்ற இடத்தில் பல பரிட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற இந்திய பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய சி அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் ரஜத் பட்டிதார், இசான் கிஷன், அபிஷேக் போரேல், பாபா இந்திரஜித், மார்க்கண்டே, மானவ் சுதர் போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இதேபோன்று இந்திய பி அணியில் அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ்குமார் ரெட்டி, முசீர் கான்,நாராயன் ஜெகதீசன், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ராகுல் சாகர், சாய் கிஷோர் ரிங்கு சிங், சர்பராஸ்கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் உலகின் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் வாரியம் என்று அழைக்கப்படும் பிசிசிஐ வெறும் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதும் போட்டியை தான் நேரலை செய்கின்றது. இதனால் பி மற்றும் சி அணிகள் மோதும் இந்த போட்டியை ரசிகர்கள் நேரலையில் பார்க்க முடியாது. இந்த நிலையில் இந்திய சி அணியின் கேப்டன் ருதுராஜ் பேட்டிங் செய்ய வந்தார்.
ருதுராஜ் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஏனென்றால் இந்தியா அடுத்தடுத்து பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால், ருதுராஜ் இந்திய அணியில் இடம் பெற துலீப் கோப்பையை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. முதல் ரவுண்டில் ருதுராஜ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால் இரண்டாவது ரவுண்டில் அவர் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் இரண்டாவது பந்தை அடிக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து ருதுராஜ் களத்தில் இருந்து வெளியேறினார். இந்த போட்டி நேரலை செய்யப்படாததால் ருதுராஜ்க்கு என்ன ஆனது? எந்த மாதிரியான காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
ருதுராஜ் இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். இந்த சூழலில் ருதுராஜ்க்கு ஏற்பட்ட காயம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அடுத்து சாய் சுதர்சன் மற்றும் அஜித் பட்டிதார் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடி வருகின்றனர்.
தமிழக வீரர் சாய் சுதர்சன் 69 பந்துகளை எதிர் கொண்டு 39 ரன்கள் சேர்த்து விளையாடுகிறார். ரஜத் பட்டிதார் 51 பந்துகளை எதிர் கொண்டு 34 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். 20 ஓவர் முடிவில் இந்திய சி அணி 81 ரன்கள் குவித்து இருந்தது. ரஜத் பட்டிதார், சாய் சுதர்சன், இஷான் கிஷன் ஆகியோர் இந்திய சி அணியின் பேட்டிங்கில் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆட்ட நேரம் முடிவில் மீண்டும் காயத்தை பொருட்படுத்தாமல் ருதுராஜ் களத்திற்கு வந்து அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் தாம் தோனியின் சிஷ்யன் என்பதை மீண்டும் அவர் நிரூபித்தார்.