ஆனந்தபூர்: இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சி அணி வெற்றிக்கு 233 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் களமிறங்கிய இந்தியா சி அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
துலீப் டிராபி தொடரில் இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சி அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் களமிறங்கிய இந்தியா சி அணி முதல் இன்னிங்ஸில் 168 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் தமிழ்நாடு வீரர் இந்திரஜித்தின் அபார ஆட்டத்தில் இந்தியா சி அணி 4 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

பின்னர் வந்த இந்தியா டி அணி அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாடின் சாதுர்யமான கேப்டன்சியால், 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தில் இந்தியா டி அணி 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 54 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் இந்தியா சி அணி வெற்றிக்கு 233 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா டி அணி வெற்றி பெறுவதற்கு தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய தேவை எழுந்தது. இதனால் ஹர்சித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்கை வைத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அட்டாக் செய்தார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் அவர்களின் பவுலிங்கை எளிதாக சமாளித்து ஆடினர்.
இதனையறிந்த ஸ்ரேயாஸ் ஐயர் உடனடியாக அக்சர் படேலை அட்டாக்கில் கொண்டு வந்தார். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களை நிதானமாக எதிர்த்து விளையாடும் ருதுராஜ், ஸ்பின்னர்களை பொளந்து கட்டக் கூடியவர். இதனால் அவரின் பவுலிங்கில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ருதுராஜ் கெய்க்வாட் வேகமாக ரன்களை குவிக்க தொடங்கினார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 64 ரன்களை சேர்த்தனர்.
நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். முக்கியமான நேரத்தில் அதிரடியாக விளையாடி மிகச்சிறந்த தொடக்கத்தை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அளித்துள்ளார்.
முதம் இன்னிங்ஸில் கோட்டைவிட்டாலும், ருதுராஜ் கெய்க்வாட் 2வது இன்னிங்ஸில் கவுரமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா சி அணி வெற்றிபெறும் பட்சத்தில், அடுத்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.