மும்பை : துலீப் கோப்பையில் அண்டர் 19 கிரிக்கெட் வீரர் முசீர்கான் அபாரமாக சதம் விளாசி அசத்தியிருக்கிறார். இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. குறிப்பாக அடுத்த இரண்டு மாதத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணில் விளையாடுகிறது.
இந்தப் போட்டியில் இந்திய பி அணியில் சர்பராஸ்கான் மற்றும் அவருடைய தம்பி முஷீர் கான் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்தனர். சர்பராஸ் கான் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அறிமுக போட்டியிலே அபாரமாக விளையாடி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று இருந்தார்.

எனினும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் மீண்டும் சர்பராஸ்கான் துலீப் கோப்பை தொடரில் ரன் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடி அவருக்கு இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எவ்வாறு விளையாட போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆவேஸ் கான் வீசிய பந்துவீச்சில் சர்பராஸ்கான் எல்பிடபிள்யூ ஆனார். 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதேபோன்று அதிரடி வீரர் ரிஷப் பண்டும் பத்து பந்துகள் எதிர் கொண்டு வெறும் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் இருந்தாலும் சர்பராஸ்கானின் தம்பியும் அண்டர் 19 கிரிக்கெட் வீரருமான முசிர் கான் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமோ, அதேபோல் நுணுக்கமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். களத்தில் நங்கூரம் போட்டு நின்று அடிக்க வேண்டிய பந்தை மட்டுமே அடித்து ரன்களை அவர் சேர்த்தார். 227 பந்துகள் எதிர்கொண்ட முசிர் கான் 105 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரிகளும்,இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 46 என்ற அளவில் இருந்தது. முசிர் கான் சதம் அடித்தவுடன் இந்திய பி வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.ஆனால் சர்பராஸ் கான் மட்டும் தனியாக ஒரு படி முன் நின்று முஷீர்கான் சதத்தை கொண்டாடினார். தன் சொந்த ரத்தம் அடித்த சதத்தை ஒரு அண்ணனாக சர்பராஸ்கான் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்திய பி அணியில் 79 ஓவர் முடிவில் பி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் கலீல் அகமத், ஆகாஷ் தீப் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். குல்தீப் யாதவ் 14 ஓவர்கள் வீசி 50 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து எந்த விக்கெடையும் வீழ்த்தாமல் இருக்கிறார்.