இந்திய அணியின் வருங்கால கேப்டனாக முன்னிறுத்தப்பட்டு வரும் சுப்மன் கில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். தற்போது வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் துலீப் டிராபி எனும் உள்ளூர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டு உள்ளது.
வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் இரண்டு போட்டிகளில் சுப்மன் கில் மற்றும் பிற இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இந்தியா ஏ அணியின் கேப்டனாக இருக்கிறார் சுப்மன் கில். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்து இருந்தது.

இந்தியா பி அணியில் இடம் பெற்று இருந்த ரிஷப் பண்ட் 7 ரன்கள் மட்டுமே எடுத்து சுப்மன் கில் பாய்ந்து சென்று பிடித்த கேட்ச் காரணமாக ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ரிஷப் பண்ட் பந்தை உயரமாக அடித்தார். அந்த பந்தை பிடிக்க ஓடி சென்ற சுப்மன் கில் பாய்ந்து சென்று பந்தை பிடித்தார். ஆனால், அப்போது அவருக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதை அடுத்து பிசிசிஐ பதற்றத்தில் உள்ளது.
சுப்மன் கில் அப்போது வலியை பொறுத்துக் கொண்டு ஃபீல்டிங் செய்தார். இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது சுப்மன் கில் பேட்டிங் செய்ய வருவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அவருக்கு வலி மற்றும் காயம் பெரிதாக இருந்தால் அவரால் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போகலாம். பிசிசிஐ அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஏற்கனவே, இந்திய அணியில் டெஸ்ட் அணியில் இடம் பெற பல வீரர்களிடையே கடுமையான போட்டி உள்ளது. இந்த சூழ்நிலையில் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டால் அது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே அமையும். இந்த போட்டியின், இரண்டாம் நாள் அன்று இந்தியா ஏ அணி பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்போது சுப்மன் கில் பேட்டிங் செய்ய வருவாரா? இல்லையா? என்பதை பொறுத்தே அவர் காயத்தில் சிக்கியிருக்கிறாரா? அல்லது அது லேசான காயம் தானா? என்பது தெரிய வரும்.
வங்கதேச டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் பங்கேற்கவில்லை எனில், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இடம் பெறக் கூடும். அவர்கள் இருவரும் இதற்கு முன் நடந்த புச்சி பாபு தொடரிலும் சரியாக ரன் குவிக்கவில்லை. தற்போது துலீப் ட்ராபி தொடரின் முதல் போட்டியிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து உள்ளனர். அடுத்து வரும் இன்னிங்ஸ்களில் சிறப்பாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரையும் தவிர்த்து ரஜத் படிதாருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.