பெங்களூர்: துலீப் கோப்பை 2025 ஆம் ஆண்டு சீசனில் இறுதிப்போட்டி இன்று பெங்களூரில் தொடங்கியது. இந்த போட்டியில் முஹம்மது அசாருதீன் தலைமையிலான சவுத் சோன் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான சென்ட்ரல் சோன் அணியும் பலப் பரிட்சை நடத்தியது.
சவுத் சோன் அணியில் இருந்த நாராயணன் ஜெகதீசன் மற்றும் தேவுதட் படிக்கல் ஆகியோர் இந்திய ஏ அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதால், இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் டாஸ் வென்ற சென்ட்ரல் சோன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய சவுத் ஜோன் அணியில் தொடக்க வீரர் தான்மே அகர்வால் 76 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான மோகித் காலே ஒன்பது ரன்களிலும், ரவிச்சந்திரன் சமரன் 1 ரன்களிலும், கேப்டன் முகமது அசாருதீன் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிக்கி பியூ 15 ரன்களில் வெளியேறினார்.
இதனால் சவுத் சோன் அணி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து களம் இறங்கிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆண்டிரே சித்தார்த் வெறும் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மற்றொரு நடுவரிசை வீரரான சல்மான் நிசார் 24 ரன்கள் சேர்க்க சவுத் சோன் அணி 63 ஓவரில் 149 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சென்ட்ரல் சோன் அணியில் அபாரமாக பந்து வீசிய சரான்ஸ் ஜெயின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைப் போன்று குமார் கார்த்திகேயன் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சாகர் 6 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். குல்தீப் சென் 8 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
லீக் சுற்று போல் அல்லாமல் இறுதிப்போட்டி 5 நாட்களைக் கொண்டது. இதனால் சவுத் ஜோன் அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடித்து வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.இல்லை என்றால் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டினாலே சென்ட்ரல் சோன் அணி சாம்பியன் பட்டத்தை வென்று விடும்.