பெங்களர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன முகமது சமி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் சமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அதிலிருந்து மீண்டு இந்த தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட்டிலாவது சமி விளையாடுவார் என மருத்துவக் குழு கூறியிருந்தது. ஆனால் அடிக்கடி காயம் அடையும் வீரரை நம்பி இங்கிலாந்து போன்ற சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது என தேர்வு குழுவினர் கூறியிருந்தனர்.

மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு பதில் புதிதாக வேறொரு வீரரை சேர்த்து விடலாம் என்ற முடிவில் அவர்கள் இருந்தனர். இது சமிக்கு மிகப்பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த தருணத்தில் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான துலீப் கோப்பைத் தொடர் இன்று தொடங்கியது.
இதில் ஈஸ்ட் ஸோன் அணியில் முகமது சமி, முகேஷ் குமார் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் களமிறங்கினர். ஈஸ்ட் சோன் அணியில் கேப்டனாக இருந்த ரியான் பராக் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். நார்த் சோன் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சமி, போர் குதிரை போல் தொடர்ந்து ஓவர்களை வீசி தனது உடல் தகுதியை நிரூபித்தார்.
பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் மொத்தமாக சமி 17 ஓவர்களை வீசி வெறும் 55 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் நார்த் சோன் அணி 308 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. மற்றொரு வீரரான முகேஷ் குமார் 11.5 ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இதேபோன்று சென்ட்ரல் சோன் மற்றும் நார்த் ஈஸ்ட் ஸோன் அணிக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் ஸோன் அணி முதலில் பந்து வீசினார். இதில் சென்ட்ரல் சோன் அணியின் கேப்டனாக களம் இறங்கிய ரஜத் பட்டிதார் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 81 பந்துகளில் அவர் சதத்தை பூர்த்தி செய்தார். மொத்தமாக 96 பந்துகளில் அவர் 125 ரன்கள் அடித்தார்.
இதில் 21 பவுண்டரிகளும்,மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று டேனிஷ் மலேவர் என்ற வீரர் 219 பந்துகளை எதிர் கொண்டு 198 ரன்கள் அடித்து களத்தில் நிற்கின்றார். இதன் மூலம் சென்ட்ரல் சோன் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் எடுத்திருக்கின்றது.