மும்பை: ஐபிஎல் தொடர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கத்தால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பல கிரிக்கெட் விமர்சனங்களும் தங்களது வேதனையை தெரிவித்திருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என பிறந்து வளர்ந்த புஜாரா அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
புஜாரா இடத்திற்கு இன்னும் சரியான நபரை இந்திய அணி தேர்வு செய்யவில்லை. சாய் சுதர்சன் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் அந்த இடத்திற்கு இருந்தாலும் தற்போது 21 வயதான டேனிஷ் மாலேவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த 21 வயது வீரரான அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா, ராகுல் டிராவிட் ஆகியோர் போல் மூன்றாவது வீரராக களம் இறங்கி களத்தில் நங்கூரமிட்டு நிதானமாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 10 முதல் தர போட்டிகளில் ஐந்து முறை 50 ரன்கள் அடித்துள்ளார். இதில் இரண்டு சதமும் அடங்கும். அவருடைய சராசரி 65 என்று அளவில் இருக்கின்றது.
குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கிரிக்கெட் மும்பை அணிக்கு எதிராக களம் இறங்கிய டேனிஷ் மாலேவர் 79 ரன்கள் அடித்தார். அந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்று பெருமையை அவர் பெற்றிருந்தார். தற்போது துலீப் கோப்பையில் சென்ட்ரல் ஜோன் அணிக்காக விளையாடிய டேனிஷ் மாலேவர் 222 பந்துகளை எதிர் கொண்டு 203 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் 36 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அவுட் ஆகாமல் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக டேனிஷ் மாலேவர் என்பவர் ரிட்டையர் அவுட் ஆனார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாலேவர், கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என சிறு வயதிலிருந்து உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "என்னுடைய தந்தை எப்போதுமே என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். எதற்காக நான் ஏழு வயதில் இருக்கும்போதே என்னை அவர் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தார். பல கஷ்டங்கள், நெருக்கடிகளை சமாளித்து தான் எனது பெற்றோர்கள் எனக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்தனர்."
" நான் நன்றாக விளையாடுவதை பார்த்து பலரும் எனக்கு பேட், பேடு மற்றும் கிளவுஸ் ஆகியவற்றை வழங்குவார்கள். நான் அண்டர் 19 அணியின் விளையாடும் போது தான் எனக்கு கிரிக்கெட் மூலம் பணம் வந்தது" என்று கூறினார். துலீப் கோப்பையில் மாலேவர் அடித்த இந்த இரட்டை சதம் மூலம் அவர் தேர்வுக்குழுவின் ரேடாருக்குள் வந்துவிட்டார். இதனால் இந்திய அணியில் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.