துலீப் கோப்பை பைனல்: வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்.. 2வது இன்னிங்சில் வெறும் 8 ரன்களில் அவுட்
சென்னை: துலீப் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், சவுத் ஜோன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஈஸ்ட் ஜோன் அணி தனது தொடக்க ஆட்டக்காரர்களை விரைவாக இழந்து தடுமாறி வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தின் தனது 2வது இன்னிங்சில் ஈஸ்ட் ஜோன் அணி 9.6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, சவுத் ஜோன் அணியின் கேப்டன் திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் நம்பிக்கையைத் தக்கவைத்தார். அவர் சதத்தை நெருங்கிய வேளையில் துரதிர்ஷ்டவசமாக 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் சவுத் ஜோன் அணி தனது முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதனைத் தொடர்ந்து தனது ஆட்டத்தைத் தொடர்ந்த ஈஸ்ட் ஜோன் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முகமது சிராஜ் வீசிய பந்தில் அபிமன்யு ஈஸ்வரன் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்கள் எடுத்திருந்தபோது திரிபுரானா விஜய் பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் ஈஸ்ட் ஜோன் அணி 13 ரன்களுக்குள் தனது 2 விக்கெட்டுகளையும் இழந்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் இஷான் கிஷன் மற்றும் ஷிகர் மோகன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் சரிவைத் தடுத்து வருகிறது. தற்போது 9.6 ஓவர்கள் முடிவில் ஈஸ்ட் ஜோன் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஷிகர் மோகன் 8 ரன்களுடனும், இஷான் கிஷன் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். சவுத் ஜோன் பந்துவீச்சில் திரிபுரானா விஜய் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
எனினும் இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் ஜோன் அணியே முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தால் கூட ஈஸ்ட் ஜோன் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும். ஈஸ்ட் ஜோன் அணி முதல் இன்னிங்சில் 708 ரன்கள் அடித்த நிலையில், சௌத் ஜோன் அணி 336 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications


