துலீப் கோப்பை 2026: சதம் அடித்து விட்டு வைலின் போல் இசைத்து கொண்டாடிய வீரர்
சென்னை: துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் குமார் குஷாக்ரா அடித்த அபார சதமும், அதனைத் தொடர்ந்து அவர் வினோதமான முறையில் கொண்டாடிய 'வயலின்' சைகையும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தென் மண்டல அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், கிழக்கு மண்டல அணிக்காக விளையாடிய அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டரான குமார் குஷாக்ரா, 100வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தை லெக் சைடு திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்ததன் மூலம், 128 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். சதமடித்த மகிழ்ச்சியில், தனது பேட்டை ஒரு வயலின் போல கையில் பிடித்து, அதை வாசிப்பது போன்று சைகை செய்து அவர் கொண்டாடினார். இந்த சுவாரஸ்யமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சதம் அடித்த சிறிது நேரத்திலேயே குஷாக்ரா ஆட்டமிழந்தார். அவர் 132 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 101 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த போது கிழக்கு மண்டல அணி 101வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 471 ரன்கள் எடுத்திருந்தது.
முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டல அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி 100 ரன்கள் சேர்த்து பலமான தொடக்கத்தை அளித்தது. 15வது ஓவரில் சூர்யவன்ஷி விக்கெட்டை சாமா மிலிந்த் வீழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து ஈஸ்வரன் 72 ரன்கள் மற்றும் ஷிகர் மோகன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல் மற்றும் நாராயண் ஜெகதீசன் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இதனால் கிழக்கு மண்டல அணி 147 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது.
இதன்பின், மோகன் மற்றும் கேப்டன் இஷான் கிஷன் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. 53வது ஓவரில் மிலிந்த் பந்துவீச்சில் மோகன் ஆட்டமிழந்த பிறகு, இஷான் கிஷன் மற்றும் குஷாக்ரா ஜோடி இணைந்து விக்கெட் விழாமல் தடுத்து அதிரடியாக விளையாடியது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. இறுதியாக, குஷாக்ராவின் விக்கெட்டை திரிபுரானா விஜய் கைப்பற்றினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனுகுல் ராயுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், ஆறாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தார். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் 250 ரன்கள் எடுத்திருந்தபோது, 131வது ஓவரில் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து தற்காலிகமாக விலகினார்.
இஷான் மற்றும் குஷாக்ராவின் சிறந்த பார்ட்னர்ஷிப் காரணமாக, இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது கிழக்கு மண்டல அணி 6 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.துலீப் கோப்பை தொடரில் கடந்த 13 ஆண்டுகளாக நீடித்து வரும் கோப்பை வெல்லும் கனவை இந்த முறை நனவாக்க கிழக்கு மண்டல அணி தீவிரமாகப் போராடி வருகிறது.


Click it and Unblock the Notifications


