துலீப் கோப்பை:இது தான் டா கேட்ச்..இந்திய கிரிக்கெட்டிலே இப்படி ஒரு கேட்ச் பிடித்தது கிடையாது- வீடியோ
பெங்களூர்: துலீப் டிராபி 2026 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் ஸ்மரன் ரவிச்சந்திரன் ஒரு அபாரமான கேட்சை பிடித்து அசத்தினார். சவுத் ஜோன் அணிக்காக விளையாடிய அவர், நார்த் ஜோன் பேட்ஸ்மேன் அப்துல் சமாதை வீழ்த்த ஒரு அற்புதமான ரிஃப்ளெக்ஸ் கேட்சைப் பிடித்து அவுட்டாக்கினார்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானர்ரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நார்த் ஜோன் இன்னிங்ஸின் 25-வது ஓவரின் 4-வது பந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஸ்ரேயாஸ் கோபால் வீசிய ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே வந்த லெந்த் டெலிவரியை அப்துல் சமத் கட் செய்ய முயன்றார். அப்போது பந்து ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்மரனின் வலது புறமாக வேகமாக பறந்தது.

அவர் உடனடியாகத் தனது வலது கையை நீட்டிப் பிடிக்க முயன்றபோது, பந்து அவரது உள்ளங்கையில் பட்டு முதலில் நழுவியது. இருப்பினும், கீழே விழும்போது தனது அசாத்தியமான ரிஃப்ளெக்ஸ் திறமையால் இரண்டு கைகளாலும் பந்தை மீண்டும் பிடித்து அசத்தினார்.
அப்துல் சமத் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டுக்குப் பிறகு, நார்த் ஜோன் அணி 24.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நார்த் ஜோன் கேப்டன் கன்ஹையா வாத்வான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க வீரர்களான கம்ரான் இக்பால் மற்றும் சனத் சங்வான் இணை முதல் விக்கெட்டுக்கு 36 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தது. சனத் சங்வான் 10 ரன்களுக்கு நிதீஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் இக்பால் மற்றும் ஆயுஷ் தோசேஜா ஜோடி நிதானமாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 66 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தது. தோசேஜா 23 ரன்கள் எடுத்திருந்தபோது காவுரி சைதேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஆயுஷ் பதோனி 2 ரன்களில் தனய் தியாகராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அப்துல் சமத் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நார்த் ஜோன் 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது, நார்த் ஜோன் அணி 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. கம்ரான் இக்பால் 41 ரன்களுடனும் மற்றும் கேப்டன் கன்ஹையா வாத்வான் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


Click it and Unblock the Notifications

