அனந்தபூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா சி அணிக்காக கடைசி நேரத்தில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்ட விவகாரம் பல்வேறு குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்தியா பி - இந்தியா சி அணிகள் விளையாடும் போட்டி நேரலை செய்யப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
துலீப் டிராபி தொடர் செப்.5ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா ஏ அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணியும், இந்தியா டி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா டி அணியும் வெற்றிபெற்றன. இந்த நிலையில் 2வது சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் இந்தியா ஏ அணியை எதிர்த்து இந்தியா டி அணியும், இந்தியா சி அணியை எதிர்த்து இந்தியா பி அணியும் விளையாடி வருகின்றன.

இதில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சி அணி முதல் பேட்டிங் ஆடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 126 பந்துகளில் 3 சிக்ஸ், 14 பவுண்டரிகள் உட்பட 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் சுற்றுப் போட்டிக்கு முன்பாக இஷான் கிஷன் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடைசி நேரத்தில் விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2வது சுற்றுப் போட்டிக்கு முன்பாக இந்தியா சி அணியை தவிர்த்து மற்ற 3 அணிகளுக்கும் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் இந்தியா சி அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் கடைசி நேரத்தில் திடீரென இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் நேரடியாக சேர்க்கப்பட்டு, களமிறக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஏனென்றால் முதல் சுற்றுப் போட்டிக்கு முன்பாக இஷான் கிஷன் இந்தியா டி அணியில் தான் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் விலகியதால், அவரது இடத்திற்கு கடைசி நேரத்தில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்தியா சி அணிக்காக இஷான் கிஷன் களமிறங்கியுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இஷான் கிஷன் எப்படி இந்தியா சி அணியில் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற எப்படி என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
அதேபோல் துலீப் டிராபி போட்டிகளை நேரலை செய்ய ஜியோ சினிமா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இஷான் கிஷன் களமிறங்கிய இந்தியா சி - இந்தியா பி அணிகளுக்கு இடையிலான போட்டி நேரலை செய்யப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் 2வது பந்திலேயே ரிட்டையர்ட் ஹர்ட்டான ருதுராஜ் கெய்க்வாட், எப்படி காயமடைந்தார் என்பதும் மர்மமாக உள்ளது. பின்னர் 3வது விக்கெட்டுக்கு பின் களம் புகுந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்ட நேர முடிவில் 46 ரன்களுடன் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.