பெங்களூரு: 2024 துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் சர்ஃபராஸ் கான் மற்றும் ஆவேஷ் கான் இடையே பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதனால் சர்ஃபராஸ் கான் கோபம் அடைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுக்கமான முகத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
2024 துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதிய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து இந்தியா பி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. அப்போது 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. அப்போது சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். ஆகாஷ்தீப் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து ஐந்து ஃபோர் அடித்தார் சர்ஃபராஸ் கான். இதை அடுத்து இந்தியா பி அணி கடும் அழுத்தத்தில் சிக்கியது.
மறுபுறம் ரிஷப் பண்ட்டும் அதிரடி ஆட்டம் ஆடினார். குல்தீப் யாதவின் ஓவர்களில் குறி வைத்து அடித்தார் ரிஷப் பண்ட். அதனால் இந்தியா பி அணியின் பந்து வீச்சாளர்கள் செய்வதறியாமல் திணறினர். இந்த நிலையில் 18 வது ஓவரின் முதல் பந்தில் சர்ஃபராஸ் கான் விக்கெட்டை வீழ்த்தினார் ஆவேஷ் கான். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல்-இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து இருந்தார் சர்ஃபராஸ் கான். அவர் 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறி சென்றார்.
அப்போது ஆவேஷ் கான் அவரது முகத்துக்கு நேராக வந்து குதித்து விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். அதனால் சர்ஃபராஸ் கான் எரிச்சல் அடைந்தார். எனினும், தனது கோபத்தை வெளிக்காட்டாமல் இறுக்கமான முகத்துடன் வெளியேறினார். இந்த போட்டியில் ஆவேஷ் கான் 6 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். சர்ஃபராஸ் கானிடம் ஒரே ஓவரில் ஐந்து ஃபோர் விட்டுக் கொடுத்த ஆகாஷ்தீப் பின்னர் 14 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்கள் எடுத்தது. இந்தியா ஏ அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன் பின் இந்தியா ஏ அணி சேஸிங் செய்தது. அந்த அணியில் ரியான் பராக் 31 ரன்களும், கே எல் ராகுல் 57 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். விக்கெட்கள் வரிசையாக சரிந்தன. முகேஷ் குமார் 2 விக்கெட்களும், யாஷ் தயாள் 3 விக்கெட்களும், நவ்தீப் சைனி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்தியா ஏ அணியின் பின் வரிசை வீரர் ஆகாஷ் தீப் 3 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து அதிரடி ஆட்டம் ஆடி 42 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். எனினும், அவர் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்தியா ஏ அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா பி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.