பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த 40 நாட்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கப் போவதில்லை. செப்டம்பர் 19 அன்று நடக்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தான் இந்திய அணி அடுத்து பங்கேற்க உள்ளது.
கடந்த ஓராண்டாக தொடர்ந்து இந்திய ஆணி ஆடிய கிரிக்கெட் போட்டிகளை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த இடைவெளி சற்று கவலை அளிப்பதாக இருந்தது. இந்த நிலையில் தான் பிசிசிஐ அதிரடியாக ஒரு விஷயத்தை செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்னும் இரண்டு வாரங்களில் கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.

இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடர் வரும் செப்டம்பர் 5 அன்று தொடங்குகிறது. அதில் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அனைவரும் விளையாட உள்ளனர். குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பல ஆண்டுகளுக்கு பின்பு உள்ளூர் டெஸ்ட் போட்டி ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ சில மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்தி இருந்தது. அதில் மூத்த வீரர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனினும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மூத்த வீரர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், செப்டம்பர் 19 அன்று தொடங்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இது பயிற்சியாகவும் அமையும் என அவர் கூறியதை அடுத்து, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி என நான்கு அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே எல் ராகுல், அக்சர் பட்டேல், ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த இஷான் கிஷனும் இந்த தொடரில் பங்கேற்க உள்ளார்.
இந்த தொடரின் முதல் சுற்று போட்டிகள் பெங்களூருவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் ஆடும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாது என ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இது நல்ல செய்தியாக அமைந்துள்ளது.