பெங்களூரு: குல்தீப் யாதவ் உள்ளூர் டெஸ்ட் தொடரில் மோசமான பவுலிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் ட்ராபியில் ஒரு ஓவருக்கு 8 ரன்களை விட்டுக் கொடுத்து சிக்கலில் மாட்டி இருக்கிறார் குல்தீப். இதற்கு காரணம் ரிஷப் பண்ட் தான்.
இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களை பரிசோதிக்கும் முயற்சியாக துலீப் டிராபி என்ற உள்ளூர் டெஸ்ட் தொடரை பிசிசிஐ நடத்தி வருகிறது. அதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்புள்ள அனைத்து வீரர்களும் பங்கேற்று உள்ளனர். அதில் இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் இடம் பெற்று இருக்கிறார்.

துலீப் ட்ராபி தொடரில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார் குல்தீப் யாதவ். இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 21 ஓவர்களில் 82 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி இருந்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 3.9 ரன்களை விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்து இருந்தார் குல்தீப். அதே இன்னிங்ஸில் மற்ற ஐந்து பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு சராசரியாக 3 ரன்னுக்கும் குறைவாகவே விட்டுக் கொடுத்திருந்தனர். எனினும், குல்தீப் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மூன்று ஓவர்களில் 26 ரன்களை விட்டுக் கொடுத்து மேலும் அதிர்ச்சி அளித்தார். அதாவது ஒரு ஓவருக்கு சராசரியாக 8.66 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். இதை அடுத்து அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குல்தீப் யாதவ் இத்தனை ரன்களை விட்டுக் கொடுக்க காரணமே ரிஷப் பண்ட் தான்.
இந்த போட்டியில் இந்தியா பி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 321 ரன்கள் எடுத்தது. இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இருந்த குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் 21 ஓவர்களில் 82 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து இந்தியா பி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது.
மூன்றாம் நாள் முடிவுக்குள் அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினர். அப்போது ரிஷப் பண்ட் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் நான்கு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து மிரட்டினார். இதை அடுத்து குல்தீப் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸில் 3 ஓவர்களில் 26 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார்.
இந்திய டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் தங்களுக்கான இடத்தை பிடித்து இருக்கும் நிலையில் குல்தீப் யாதவ் இந்த மோசமான செயல்பாட்டால் மாற்று பந்துவீச்சாளராகவாவது இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.