அனந்தபூர்: துலீப் டிராபியில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இந்தியா சி அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 2வது பந்திலேயே காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். பின்னர் 3வது விக்கெட் வீழ்ந்த பின் உடனடியாக களம் புகுந்த ருதுராஜ், கடைசி நேரத்தில் அதிரடியாக சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார்.
துலீப் டிராபியின் 2வது போட்டியில் இந்தியா பி அணியை எதிர்த்து இந்தியா சி அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்தியா சி அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் - சாய் சுதர்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ருதுராஜ், 2வது பந்தில் காயமடைந்து வெளியேறினார்.

ருதுராஜ் கெய்க்வாட் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறியதால் ரசிகர்கள் பலரும் காரணம் புரியாமல் குழம்பினர். இதன்பின் ரஜத் பட்டிதர் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்து பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரஜத் பட்டிதர் 40 ரன்களிலும், சாய் சுதர்சன் 43 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
தொடர்ந்து இஷான் கிஷன் - பாபா இந்திரஜித் கூட்டணி இணைந்தது. இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, உணவு இடைவேளையின் போது இந்தியா சி அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்களாக இருந்தது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், இஷான் கிஷன் அதிரடியில் பொளந்து கட்ட, இன்னொரு பக்கம் பாபா இந்திரஜித் தனது ஸ்டைலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
48 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான் கிஷன், தொடர்ந்து அதிரடியை கைவிடவில்லை. பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து சென்ற நிலையில், இந்தியா சி அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. இந்த நிலொஐயில் இஷான் கிஷன் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப இஷான் கிஷன் சதம் அடித்து அசத்த, ஓய்வறையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்.
மறுபக்கம் பாபா இந்திரஜித்தும் அரைசதம் கடந்த அசத்தினார். இவர்களின் பார்ட்னர்ஷிப் 189 ரன்களாக இருந்த போது, இஷான் கிஷன் 126 பந்துகளில் 3 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 111 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் காயத்தால் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், களம் புகுந்தார். அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடங்கிய அவர், அணியின் ஸ்கோரை 300 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார்.
மறுபக்கம் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜித் 136 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 78 ரன்கள் எடுத்து ராகுல் சஹர் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாடின் அதிரடி குறையவே இல்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் இந்தியா சி அணி 79 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 46 ரன்களை சேர்த்து களத்தில் உள்ளார்.