பெங்களூரு : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் சவுத் சோன் அணியின் வெற்றியை தடுக்க நார்த் சோன் வீரர்கள் செய்த சதி தமிழக வீரர் சாய் கிஷோரால் முறியடிக்கப்பட்டது. பெங்களூருவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நார்த் சோன் அணியும், சவுத் சோன் அணியும் மோதினர்.
இதில் நார்த் சோன் அணியின் கேப்டனாக ஜெயந்த் யாதவும், சவுத் சோன் அணியின் கேப்டனாக ஹனுமா விகாரியும் விளையாடினர். இதில் முதலில் பேட்டிங் செய்த நார்த் சோன் அணி 198 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய சவுத் சோன் அணி 195 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மூன்று ரன்கள் முன்னிலை பெற்ற நார்த் சோன் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 211 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுத் சோன் அணி களமிறங்கியது. பொதுவாக 4 நாட்கள் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எந்த அணி முன்னிலை பெறுகிறார்களோ அவர்கள் போட்டி டிராவானால் அடுத்த சுற்றுக்கு சென்று விடுவார்கள்.
இதன் மூலம் நார்த் சோன் அணி முன்னிலை பெற்று இருப்பதால் அவர்கள் இறுதிச்சுற்றுக்கு செல்ல சில தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். சவுத் சோன் அணியை பொறுத்தவரை 215 ரன்கள் என்று இலக்கை நான்காவது நாள் முடிவதற்குள் அடித்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இதனால் சவுத் சோன் அணியின் வெற்றியை தடுப்பதற்காக நார்த் சோன் வீரர்கள் நேரத்தை வீணடித்தார்கள்.
கடைசி நாளில் 50 நிமிடத்தில் வெறும் ஐந்து ஓவர்கள் மட்டுமே நார்த் சோன் வீரர்கள் வீசினர். இதன் மூலம் போட்டியை டிரா செய்து முன்னிலை பெற்று இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் என்ற நோக்கத்தில் நார்த் சோன் வீரர்கள் செயல்பட்டனர். எனினும் இந்த சதியை முறியடிக்கும் விதமாக சவுத் சோன் வீரர்கள் அதிரடியாக விளையாடினர். மாயங் அகர்வால் 57 பந்துகளில் 54 ரன்கள், ஹனுமா விகாரி 42 பந்துகளில் 43 ரன்களும் திலக் வருமா 19 பந்துகளில் 25 ரன்களும் அடித்தார்கள்.
இந்த நிலையில் அன்றைய நாள் முடியும் தருவாயில் இருந்தது. அப்போது களத்துக்கு வந்த சாய் கிஷோர் இரண்டு சிக்ஸர்கள் அடித்து சவுத் சோன் அணியை வெற்றி பெற வைத்தார். கடைசி இன்னிங்ஸில் சவுத் சோன் அணி 36 ஓவரில் 219 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நேரத்தை கடத்தி வெற்றி பெற்று விடலாம் என நினைத்த சதியை சவுத் சோன் அணி முறியடித்து இருக்கிறது.