வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி.. பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் 4 பந்துகளில் 2 விக்கெட்
பெங்களூரு: துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது கால் இறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டல (East Zone) அணியின் துணை கேப்டனான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பந்துவீச்சில் மிரட்டினார். பேட்டிங்கில் சொதப்பிய அவர் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் வடகிழக்கு மண்டலத்திற்கு (North-East Zone) எதிராக நடைபெற்று வரும் இப்போட்டியின் மூன்றாவது நாளில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பீகாரைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்த போதிலும், பந்துவீச்சில் கிழக்கு மண்டல அணிக்கு உதவினார்.

வடகிழக்கு மண்டல அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் 28 வது ஓவரை வீசிய வைபவ், தனது ஓவரின் இரண்டாவது பந்தில் கிஷன் லிங்டோவை வெளியேற்றினார். தொடர்ந்து அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் இம்லிவாடி லெம்துரை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டாக்கினார். இதன் மூலம் 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி, சுதீப் குமார் கராமி மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோரின் அபார சதங்களால் தங்களது முதல் இன்னிங்ஸில் 467 ரன்கள் குவித்தது. ஜார்கண்ட் வீரர் குமார் குஷாக்ரா 55 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய வடகிழக்கு மண்டல அணி, வெறும் 111 ரன்களுக்குச் சுருண்டது. அபிஜித் கே. சர்க்கார் 5 விக்கெட் வீழ்த்தினார். அனுபவ பந்துவீச்சாளர் ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கிழக்கு மண்டல அணி 356 ரன்கள் என்ற பெரிய முன்னிலையை பெற்றது.
தொடர்ந்து ஃபாலோ-ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வடகிழக்கு மண்டல அணி, 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து கிழக்கு மண்டல அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.


Click it and Unblock the Notifications

