மும்பை: இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் பங்கேற்கும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் ட்ராபி தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளது. இதில் நான்கு அணிகள் இடம் பெற உள்ளன. அதில் ஒரு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இதை அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கும் இந்தியா சி அணியை தங்களின் அணியாக பாவித்து அந்த அணிக்காக குரல் கொடுத்து, தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள். அதில் ஒன்றுதான், தோனியை அந்த அணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பது. இந்த வேடிக்கையான கோரிக்கையால் பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் அவர்கள் மீது கடுப்பில் உள்ளனர்.

துலீப் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி என நான்கு அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகிய நால்வரும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுள்ள இந்தியா சி அணியில் சரியான பந்து வீச்சாளர்கள் இல்லை எனவும், அந்த அணியில் தோனியை சேர்த்தால் அவர் வியூகங்கள் வகுத்து அந்த அணியை வெற்றி பெற வைப்பார் எனவும் சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதில் வேடிக்க என்னவென்றால் தோனி 2014ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அதன் பின்பு அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடியது இல்லை. இந்த நிலையில் அவரை உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் ட்ராபியில் ஆட வைக்க வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஒரு வேளை தோனி துலீப் ட்ராபி தொடரில் விளையாட வேண்டும் என நினைத்தால், அதை அவர் இந்திய தேர்வு குழுவுக்கு தெரிவிக்கலாம். அவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அவரை இந்த தொடரில் ஆட வைக்க முடியும். எனினும், தற்போது 43 வயதாகும் தோனி டி20 போட்டிகளில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதிலேயே சிரமத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, சாத்தியமில்லாத ஒரு விஷயத்தை சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேடிக்கையாக கூறி வருகின்றனர்.