சென்னை: இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிக முக்கியமான தொடராகக் கருதப்படும் துலீப் டிராபி, ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த முறை, மீண்டும் மண்டல (Zonal) முறைக்கு பிசிசிஐ திரும்பியுள்ளது. இந்நிலையில், இந்தத் தொடருக்கான தெற்கு மண்டல (South Zone) அணியின் கேப்டனாக இளம் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு அந்த அணியில் இடம் கிடைக்காதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக துலீப் டிராபி தொடர், இந்தியா ஏ, பி, சி, டி என நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால், இந்த முறையில் உள்ளூர் வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது. இதையடுத்து, மாநில கிரிக்கெட் சங்கங்களின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, மீண்டும் பழையபடி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு என ஆறு மண்டலங்களாக அணிகளைப் பிரித்து இந்தத் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், ரஞ்சி டிராபி போன்ற உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்படும் பல வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், இந்திய டி20 அணிக்காகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மா, தெற்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதற்கு முன், தனது ஹைதராபாத் அணிக்காகவும், எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரிலும் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் அவருக்கு உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டிலும் ஹாம்ப்ஷயர் அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆக்ரோஷமான ஆட்டமும், தலைமைப் பண்பும் இந்த புதிய பொறுப்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த முகமது அசாருதீன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
இந்த அணித் தேர்வில் மிகப் பெரிய ஆச்சரியம், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமான சாய் சுதர்சனின் பெயர் இல்லாததுதான். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சாய் சுதர்சன், தற்போது அங்குதான் உள்ளார். ஒருவேளை, சர்வதேச தொடரில் விளையாடிவிட்டு திரும்பும் வீரருக்கு ஓய்வு அளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், துலீப் டிராபி போன்ற ஒரு முக்கியமான தொடரில், அதுவும் தெற்கு மண்டல அணியில் தமிழகத்தின் முக்கிய வீரர் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
தெற்கு மண்டல அணியில் தமிழகத்தைச் சேர்ந்த என். ஜெகதீசன், ஆர். சாய் கிஷோர் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் தேவ்தத் படிக்கல், விஜய் குமார் வைஷாக் போன்ற அனுபவ வீரர்களும் அணியில் உள்ளனர்.
திலக் வர்மா (கேப்டன்), முகமது அசாருதீன் (துணை கேப்டன்), தன்மே அகர்வால், தேவ்தத் படிக்கல், மோஹித் காலே, சல்மான் நிசார், நாராயண் ஜெகதீசன், திரிபுரானா விஜய், ஆர் சாய் கிஷோர், தனய் தியாகராஜன், விஜய்குமார் வைஷாக், நிதீஷ் எம்.டி, ரிக்கி புய், பசில் என்.பி, குர்ஜப்னீத் சிங், சினேகல் கௌதங்கர்.