மும்பை: 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, நட்சத்திர வீரர் சுப்மன் கில், உடல்நலக்குறைவு காரணமாக துலீப் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த செய்தி, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
பெங்களூருவில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள துலீப் டிராபி தொடருக்கான வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த கில், இந்த உள்ளூர் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அவர் திடீரென விலகியுள்ளது வடக்கு மண்டல அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த கில், யாரும் எதிர்பாராத விதமாக துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்குப் பதிலாக அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது சண்டிகரில் ஓய்வில் இருக்கும் கில், துலீப் டிராபியில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியக் கோப்பை தொடர் நெருங்கி வருவதால், அவர் முழுமையாக குணமடைந்து சர்வதேசப் போட்டிக்குத் தயாராவதே முக்கியம் என பிசிசிஐ வட்டாரங்கள் கருதுகின்றன. கில் இல்லாத நிலையில், வடக்கு மண்டல அணியை அங்கித் குமார் வழிநடத்த வாய்ப்புள்ளது.
சில மாதங்கள் முன்பு இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் ஆடினால் தான் இந்திய அணியில் வாய்ப்பு என கூறப்பட்டு இருந்தது. அதற்கேற்ப டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில் துலீப் டிராபியில் சேர்க்கப்பட்டார். அதன் பின் ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
அந்த செய்தி வெளியான மூன்று நாட்களில் அவர் உடல்நிலை சரியில்லாததால் துலீப் டிராபியில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுப்மன் கில் ஓய்வு எடுக்க வேண்டி இவ்வாறு சொல்லப்படுகிறதா? என சில ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். ஆனால், அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை பிசிசிஐ சுப்மன் கில் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சுப்மன் கில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு இருந்ததாகவும், அவருக்கு பெரிய நோய்த்தொற்று ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அவர் சில நாட்கள் மட்டும் ஓய்வு எடுத்தால் போதும் என மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும், அவரால் துலீப் ட்ராபி தொடருக்குள் தேறி விட முடியும் என்றாலும் ஆசிய கோப்பையை மனதில் வைத்து பிசிசிஐ அவரை ஓய்வில் இருக்க அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.