ஓஹோ.. இது டங்கனுக்கு வச்ச குறியா.. அவர் இனி தேவையில்லை என்கிறது பிசிசிஐ!
டெல்லி: இங்கிலாந்தில் சரிந்து போயக் கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணியைத் தூக்கி நிறுத்த சில பல நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்து பயிற்சியாளர் டங்கன் பிளட்சரிடம் வந்து நிற்கிறது. அவர் விலகினால் விலகலாம், அதை ஏற்போம் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால் இங்கிலாந்து தொடரோடு பிளட்சர் கிளம்பி விடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனேகமாக அவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே விலகி விடுவார் என்றும் தெரிகிறது.
நேற்றுதான் இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரியை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும் பிளட்சருக்கு உதவியாக இரு முன்னாள் இந்திய வீரர்களையும் நியமித்தது. பீல்டிங், பவுலிங் பயிற்சியாளர்களையும் ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டது.

நாட்கள் எண்ணப்படுகின்றன
இந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அவர் வந்தது முதலே அணி ஆட்டம் கண்டுதான் வருகிறது. ஆனால் இத்தனை காலம் விட்டு விட்ட வாரியம் தற்போது டங்கனை நெருக்க ஆரம்பித்து விட்டது.

டங்கன் இனி டம்மி
ரவி சாஸ்திரி நியமனம் குறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், டங்கனுக்கு இனி வேலை இல்லை. எல்லா முடிவையும் ரவி சாஸ்திரிதான் எடுப்பார். டங்கனுக்கும் இது தெரியும். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ள வேண்டும்.

போனால் போகட்டும்
ஒரு வேளை டங்கன் பிளட்சர் விலக விரும்பினால் அதை வாரியம் தடுக்காது. முடிவை ஏற்றுக் கொள்வோம் என்றார் அவர்.

நீ வேணாம் போய்ரு போய்ரு...!
அவரிடம் பிளட்சரை விலகச் சொல்லி விட்டதா வாரியம் என்ற கேள்விக்கு, உங்களது சேவை தேவையில்லை என்பதை பல பீலர்கள் மூலம் ஏற்கனவே உணர்த்தி விட்டோம். போதிய அளவுக்கு உணர்த்தி விட்டோம் என்றார் அவர்.

டோணியுடன் இணைந்து திட்டமிடுவார் ரவி
மேலும் அவர் கூறுகையில் கேப்டன் டோணியுடன் இணைந்து ரவி சாஸ்திரி திட்டமிட்டு செயல்படுவார். சஞ்சய் பாங்கர் தனது திறமையை நிரூபித்துள்ளவர். இளம் வீரர்களை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் தற்போதைய வேகப் பந்து வீச்சாளர்கள் பலரும் பரத் அருணிடம் பயின்றவர்கள்தான். எனவே இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். இப்படி இருக்கையில் டங்கனுக்கு அங்கு என்ன வேலை இருக்கப் போகிறது..

புரிஞ்சா சரித்தான்
டங்கன் தனது நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு ராஜினாமா செய்தால் நல்லது. அதை நாங்கள் ஏற்போம் என்றார்.

அக்டோபர் 8ல்
அக்டோபர் 8ம் தேதி இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான ஒரு நாள் தொடர் தொடங்கவுள்ளது. எனவே அதற்கு முன்பாகவே டங்கன் போய் விடுவார் என்று தெரிகிறது.
ஓஹோ.. அப்ப இது டங்கனுக்கு வச்ச குறியா..!


Click it and Unblock the Notifications