மும்பை:ரமலான் நோன்பின் போது, ஐபிஎல் கிரிக்கெட் விளையாடுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்று ரஷித் கானுக்கும், முகமது நபிக்கும் ஷிகர் தவான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகள் கிட்டத்தட்ட கிளைமாக்சை நெருங்கிவிட்டது. வரும் 12ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் முன்னேறிவிட்டது. அதனுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்னும் தெரியவில்லை.

அதே நேரத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்சும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதின. பரபரப்பான இந்தப் போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் ஏராளமான சுவாரசியமான நிகழ்வுகள் இருந்தாலும், வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபியின் பங்கேற்பு தான் கவனிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். இந்த தருணத்தில் நோன்பையும் கடைபிடித்து, போட்டியிலும் விளையாடுவதை தான் மீசை முறுக்கி வீரர் ஷிகர் தவான் பாராட்டி உள்ளார்.
அவர்களை பாராட்டி தவான் ஒரு டுவிட்டர் பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துகள். அவர்களை நினைத்து ரொம்ப பெருமையாக இருக்கிறது. நாள் முழுக்க உண்ணாமல் நோன்பிருந்து பின்னர் ஆட்டத்தில் விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பெரிய கனவை காணவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவதாக உங்களின் செயல் உள்ளது. அல்லாஹ்.... உங்கள் இருவரையும் ஆசிர்வதிப்பாராக என்று கூறியிருக்கிறார்.