
எதிர்பார்க்காத ஸ்கோர்
இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. 120 ரன்களுக்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பிறகும் மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 262 ரன்களை எட்டியது. அந்த அணி 200 ரன்களையே கடக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், பிரேமதாஸா ஸ்டேடியத்தின் ஸ்பின் டிராக்குக்கு ஏற்ப நல்ல ஸ்கோரை எட்டியது இலங்கை.

ஹெல்மெட்டில் தாக்கிய பந்து
இதையடுத்து, இந்திய அணியில் ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர், தவான் அப்படியே ஒரு ஓரத்தில் சைலண்ட்டாக நிற்க, ப்ரித்வி ஷா பவுண்டரிகளை பறக்கவிட்டார். 24 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். இதில், 9 பவுண்டரிகள் அடக்கம். அப்போது சமீரா வீசிய பந்து ஒன்று, ப்ரித்வி ஹெல்மெட்டில் மிக பலமாக தாக்கியது. ஹெல்மெட்டில் பட்ட வேகத்தில் அது பவுண்டரிக்கே சென்றுவிட்டது.

அடுத்த பந்திலேயே கேட்ச்
இதனால் ப்ரித்வி ஷா சற்றே நிலைகுலைந்து போனார். உடனடியாக நிபுணர்கள் வந்து அவரை சோதனை செய்தார்கள். இதனால் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. தனக்கு அடிப்பட்ட இடத்தை ப்ரித்வி காண்பிக்க அவர்கள் செக் செய்தனர். அதன் பிறகு அவர் பேட்டிங் செய்ய ஒப்புக் கொண்டாலும், அவரிடம் ஒரு அயற்சி தெரிந்தது. அதற்கு ஏற்றார் போல், அவர் சந்தித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஸ்கேன் எடுக்க வாய்ப்பு
எனினும், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை ஏதும் தகவல் வெளியிடப்படவில்லை. நாளை மறுதினம் 2வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அவர் அதில் விளையாடுவாரா என்பது குறித்து இனிமேல் தான் அறிவிக்கப்படும். அவருக்கு தலையில் நிச்சயம் ஸ்கேன் செய்து பார்க்கப்படும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











