சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 22) நடைபெற்ற சிஎஸ்கே அணியின் 'ரோர் 26' (Roar 26) ரசிகர் திருவிழா சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் ஒன்றிணைந்த இந்த விழாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் டுவைன் பிராவோ கலந்துகொண்டது கொல்கத்தா அணி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே அணிக்காக 11 ஆண்டுகளில் 130 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பிராவோ. அந்த அணியின் வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்த அவர், தற்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று நடந்த விழாவில் பழைய சிஎஸ்கே வீரர்களுக்காகப் பிராவோ களம் இறங்கியதுடன், மேடையில் பாடல்களைப் பாடி உற்சாகமாகப் பங்கேற்றார்.

தங்கள் அணியின் முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒருவர், பரம எதிரியாகக் கருதப்படும் சிஎஸ்கே அணியின் விழாவில் இவ்வளவு தீவிரமாகப் பங்கேற்பது முறையல்ல என்று கொல்கத்தா ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், மற்ற அணிகளுடன் மிகத் தீவிரமான போட்டி மனப்பான்மையைக் கொண்டிருந்தார். ஆனால் பிராவோ சிஎஸ்கே பாசத்தை இன்னும் விடவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிராவோவைத் தவிர மேத்யூ ஹெய்டன், பார்த்திவ் படேல் (குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர்கள்) மற்றும் முத்தையா முரளிதரன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர்) ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இதற்காகக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு சிஎஸ்கே நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளது. மற்ற வீரர்களை விடப் பிராவோ இந்த விழாவில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டதே விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்தது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள், ஐபிஎல் தொடரில் அணிகளுக்கு இடையே போட்டி இருந்தாலும் வீரர்களுக்கு இடையே நட்பு இருப்பதைத் தவறாகப் பார்க்கக் கூடாது என்று கூறி வருகின்றனர். இது ஒரு கிரிக்கெட் தொடர், ஐரோப்பிய கால்பந்து லீக் தொடர்களில் இருப்பதைப் போன்ற கடும் பகை இங்கே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் பலரது கருத்தாக உள்ளது.
இந்த விழாவில் சுரேஷ் ரெய்னா மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோர் சிஎஸ்கே ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியுடன் களைகட்டிய இந்த விழாவிற்குப் பிறகு, வரும் மார்ச் 29 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கொல்கத்தா அணியுடன் பிராவோ களம் காண உள்ளார்.
