மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு சீசனிலும் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை தொடர் தொடங்குவதற்கு முன்பு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிப்பார்கள். இந்த நிலையில் நடப்பு சீசன் தொடங்குவதற்கு முன்பு முதல் இரண்டு இடத்தை எந்த அணி பிடிக்கும் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பலரும் பதில் அளித்து இருந்தார்கள். இதில் டேவிட் ஹசி, ராஜஸ்தான், லக்னோ அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் என்று கூறி இருந்தார். இதேபோன்று காலிஸ் ராஜஸ்தான் ,டெல்லி அணி முதல் இரண்டு இடத்தை குறிக்கும் என தெரிவித்திருந்தார்.

அதேபோன்று ஆரோன் பிஞ்ச், குஜராத்தும் ராஜஸ்தானும் முதல் 2 இடத்தை நிறைவு செய்வார்கள் என்று தெரிவித்திருந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், லக்னோவும், பெங்களூரும் முதல் இரண்டு இடத்தை நிறைவு செய்வார்கள் என கணித்திருந்தார். சஞ்சய் மஞ்சரேக்கரும், இர்ஃபான் பத்தானும் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் என தெரிவித்திருந்தார்கள்.

அதேபோன்று முகமது கைஃப் பெங்களூர் மற்றும் லக்னோ அணி முதல் இரண்டு இடத்தில் நிறைவு செய்யும் என்று கணித்து இருந்தார். இந்த நிலையில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு இடத்தை குஜராத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான் நிறைவு செய்திருந்தது. இந்த விமர்சகர்கள் யாரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதல் இரண்டு இடத்தில் பிடிக்கும் என்று சொல்லவே இல்லை. ஆனால் தற்போது சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இதனால் இந்த வீரர்களை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ, முட்டாள் தினத்தன்று இந்த கணிப்பு செய்யப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன். சென்னை அணி 12 முறை பிளே ஆப் சுற்றுக்கும், ஒன்பது முறை பைனலுக்கும் சென்று நான்கு கோப்பையை வென்றிருக்கிறார்கள். ரெஸ்பெக்ட் என ஒரே வார்த்தையில் அத்தனை பேரையும் கிளீன் போல்ட் ஆக்கி இருக்கிறார். பிராவோவின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.