சென்னை: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்ததை பாராட்டும் விதமாக, அந்த அணி தங்கியிருக்கும் ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கடந்த பிப்.5ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் குவிக்க, சிப்லே 87 ரன்களும், ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் இஷாந்த், பும்ரா, அஷ்வின், ஷாபாஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
கிரிக்கெட் உலகில் 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோ ரூட் தான். அதுமட்டுமின்றி, டான் பிராட்மேனுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் 150 ரன்களுக்கு மேல் அடித்த 2-வது கேப்டன் எனும் பெருமையையும் ஜோ ரூட் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய 2வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு, இங்கிலாந்து வீரர்கள் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு திரும்பினர். அப்போது, வரவேற்பறையில் 'ரூட்'டின் இரட்டை சதத்தை பாராட்டும் விதமாக, ஹோட்டல் நிர்வாகம் சார்பில் அவருக்கு கேக் வெட்டப்பட்டது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், சென்னையில் ஜோ ரூட்டிற்கு அளித்த வரவேற்புக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளது.
எதிரணி வீரர்களாக இருந்தாலும், அவர்கள் சாதனைகளை மதிக்கும் மாண்பு, சென்னையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாகிஸ்தானின் சயீத் அன்வர் தொடங்கி, ரூட் வரை சாதனையாளர்களுக்கு மதிப்பளிப்பதில் தமிழகமே என்றும் டாப்.