மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது கைப் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த கணக்கெடுப்பு படிவங்களில் காணப்பட்ட சில முரண்பாடுகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்கால் மாநில அணி சார்பாக தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வரும் ஷமி, கொல்கத்தாவில் நடைபெறும் இந்த விசாரணையில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த டிசம்பர் 16, 2025 அன்று தொடங்கின. இதன் ஒரு பகுதியாக, ஷமிக்கும் அவரது சகோதரரான முகமது கைப்புக்கும் விசாரணைக்கு ஆஜராகும்மாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களின் வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவே இந்தச் சம்மன் அனுப்பபட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல் மற்றும் சுயவிவரத் தகவல்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் பெங்கால் மாநில அணி சார்பாக விளையாடி வருவதால், திட்டமிடப்பட்ட விசாரணையில் பங்கேற்க இயலாது என கிரிக்கெட் வீரர் ஷமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். "சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக ஜனவரி 5, 2026 அன்று உங்கள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கிடைத்த அறிவிப்பைக் குறிப்பிட்டு எழுதுகிறேன்.
தற்போது நான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில், பெங்கால் மாநில அணியின் அதிகாரப்பூர்வ வீரராக பங்கேற்பதால், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் திட்டமிடப்பட்டுள்ள விசாரணையில் கலந்துகொள்ள இயலாது என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் ஷமி குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பகுதியிலுள்ள கார்ட்ஜு நகர் பள்ளியிலிருந்து திங்கள்கிழமை அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விசாரணைக்கு உதவி தேர்தல் பதிவு அதிகாரி (AERO) முன் ஆஜராகும்படி இந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஷமி ஜனவரி 5-ஆம் தேதி ஆஜராக வேண்டியிருந்த நிலையில், அவரது கடிதத்திற்குப் பிறகு விசாரணை ஜனவரி 9 முதல் 11-ஆம் தேதிக்குள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஷமி உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் பிறந்தவர் என்றாலும், பல வருடங்களாக கொல்கத்தாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். அவர் கொல்கத்தா மாநகராட்சி (கே.எம்.சி) வார்டு எண் 93-இல் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வார்டு ராஷ்பேஹாரி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.
இதற்கிடையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் ஜனவரி 3, 2026 அன்று ஒரு கடிதம் எழுதினார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் (SIR) நடந்து வரும் நடைமுறைக் குளறுபடிகள், தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் சட்ட விதிமீறல்கள் குறித்து அவர் தனது கடுமையான கவலைகளைத் தெரிவித்திருந்தார். இதனால் உண்மையான வாக்காளர்கள் தங்கள் உரிமையை இழக்க நேரிடும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.SIR தொடர்பான முக்கிய வழிமுறைகள், முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்புகள், சுற்றறிக்கைகள் அல்லது சட்டப்பூர்வ உத்தரவுகள் இன்றி, வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் முறைசாரா முறையில் தெரிவிக்கப்பட்டு வருவதாக பானர்ஜி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.