டெல்லி: ஐபிஎல் போட்டிகளை வைத்து டெல்லியில் மிகப் பெரிய சூதாட்டம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தகவல் கிடைக்கப் பெற்றதும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், டெல்லி அருகே குர்கான் என்ற இடத்தில் அதிரடி ரெய்டுகளை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஒன்இந்தியாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சிலர் கூறுகையில், இதில் மிகப் பெரிய பெட்டிங் கும்பல் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொடர்பு
இந்த பெட்டிங்கில் தொடர்புடைய பலருக்கும் பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர்தான் இவர்களை ஒருங்கிணைத்து நடத்தி வந்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஒரு இடத்தில்தான் இந்த பெட்டிங் கும்பலின் மையம் உள்ளது.
ஐபிஎல் தொடங்கியதிலிருந்து நான்கு இடங்களில் இருந்தபடி இந்தக் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
சமீபத்தில் வதோராவில் ரூ. 4000 கோடி அளவுக்கு பெட்டிங்கில் ஈடுபட்டிருந்த மோசடியை அமலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. தற்போது பெட்டிங்கில் ஈடுபட்ட கும்பல்களுக்கும், வதோரா கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
குர்கான்தான் மையம்
சமீப காலமாக குர்கான் நகரம், பெட்டிங் நகரமாக மாறி வருகிறது. பல புக்கிகள் இந்த நகருக்கு வந்தவண்ணம் உள்ளனர். டெல்லி கரோல் பாக்கில் உள்ள நபர் ஒருவர் மூலம் இவர்களின் பணப் பரிமாற்றம் நடப்பது தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.