கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் குவிந்த ரசிகர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பார்த்தவுடன் சச்சின், சச்சின் என அரங்கமே அதிரும்படி கோஷமிட்டனர்.
பாகிஸ்தான், இந்திய அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பை போட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் சனிக்கிழமை நடைபெற்றது. போட்டி துவங்கும் முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், இம்ரான் கான், வக்கார் யூனுஸ், வாசிம் அக்ரம், விரேந்தர் ஷேவாக், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் மற்றும் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியால் கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிப்பு நிகழ்ச்சியின்போது சச்சினின் பெயரை கூறியதும் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ரசிகர்கள் சச்சின், சச்சின் என அந்த இடமே அதிரும்படி கோஷமிட்டனர். சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகவே உள்ளார்.
நேற்றைய போட்டியில் கோஹ்லி 50 ரன்கள் குவித்த பிறகு சச்சின் அமர்ந்திருந்த திசை நோக்கி தலை வணங்கி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.