கங்குலிக்கு செக் வைத்த ஐசிசி.. வெடித்த ஈமெயில் விவகாரம்.. ஐபிஎல்-ஐ நடத்த விடாமல் செய்ய உள்ளடி வேலை?
மும்பை : மே 28 அன்று நடந்த ஐசிசி கூட்டத்தில் 2020 டி20 உலகக்கோப்பை பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மாறாக பிசிசிஐ - ஐசிசி இடையே 2020 டி20 உலகக்கோப்பைக்கான வரி விலக்கு குறித்து ஈமெயில்-லில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஊடகங்களில் வெளியானது பற்றி அந்தக் கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஐபிஎல் நடத்தும் திட்டத்துக்கு மறைமுகமாக ஐசிசி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

2020 டி20 உலகக்கோப்பை
2020 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த தொடரை பாதுகாப்பாக நடத்த முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. பெரும்பாலும் அந்த தொடரை தள்ளி வைக்கவே வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது.

ஐபிஎல் திட்டம்
இந்தியாவில் பிரம்மாண்ட டி20 தொடரான ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொடரை அக்டோபர் மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. ஆனால், அதற்கு டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பு வரும் வரை பிசிசிஐயால் அடுத்தகட்ட நடவடிக்கையை துவங்க முடியாது.

ஈமெயில் விவகாரம்
இதற்கிடையே, 2021 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு பிசிசிஐ, இந்திய அரசிடம் இருந்து வரி விலக்கு பெற்றுத் தரவில்லை என ஐசிசி சில ஈமெயில்களை அனுப்பி இருந்தது. அதில் இந்தியாவிடம் இருந்து உலகக்கோப்பை நடத்தும் உரிமையை திரும்பப் பெறுவோம் என மிரட்டல் தொனியும் இருந்தது.

ஐசிசி கூட்டம்
அந்த ஈமெயில்களில் இருந்த விஷயங்கள் கடந்த சில தினங்களில் இந்திய ஊடகங்களில் கசிந்தது. 2020 டி20 உலகக்கோப்பை மற்றும் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி விவாதிக்க நேற்று கூடிய ஐசிசி கூட்டத்தில் அவை யாவும் விவாதிக்கப்படவில்லை.

விசாரணை நடத்த முடிவு
மாறாக, பிசிசிஐ - ஐசிசி இடையே ஆன ஈமெயில் உரையாடல்கள் எப்படி ஊடகங்களில் கசிந்தது, இது உறுப்பினர்கள் பலரை கவலை அடைய வைத்துள்ளது. எனவே, இது பற்றி விசாரிக்க உள்ளதாக அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தள்ளிப் போகும் முடிவுகள்
அந்த விசாரணை குறித்து மீண்டும் ஜூன் 10 அன்று ஐசிசி கூட்டம் நடத்த உள்ளதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. முக்கிய விஷயங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக அக்டோபர் மாதம் 2020 டி20 உலகக்கோப்பை நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது பற்றி விவாதம் நடைபெறவில்லை.

பிசிசிஐ - ஐசிசி மோதல்
இதன் பின்னணியில், பிசிசிஐ - ஐசிசி மோதல் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஐசிசி தலைவராக இருக்கும் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகருக்கும், தற்போதைய பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சனைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கங்குலிக்கு செக்?
ஐபிஎல் தொடருக்கான திட்டங்களை குறி வைத்து தான் இப்படி ஐசிசி நடந்து கொள்கிறது என்ற பேச்சும் உள்ளது. பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பின் நடைபெற வேண்டிய முதல் ஐபிஎல் தொடர் கடும் சிக்கலில் உள்ளது. ஐபிஎல் தொடர் விஷயத்தில் ஐசிசி, கங்குலிக்கு செக் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications