டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணியின் எதிரான போட்டியின் போது இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் கோபத்தில் கேமராவை தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் 57 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஆடில் ரஷீத் 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் 4 ஓவர்கள் வீசி 46 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் போட்டியின் போது சாம் கர்ரன் கேமராவையும் தள்ளிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாப்லி ஆகியோரை பொளந்து கட்டினார்.
அப்போது குர்பாஸை கட்டுப்படுத்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர், உடனடியாக சாம் கர்ரனை அட்டாக்கில் கொண்டு வந்தார். முதல் ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த சாம் கர்ரனுக்கு மீண்டும் 2வது ஓவர் வழங்கப்பட்டது. அந்த ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி விளாசி அசத்தினார் குர்பாஸ். தொடர்ந்து 4வது பந்தில் மற்றொரு பவுண்டரி அடிக்கப்பட, 5வது பந்தில் சிக்சரை விளாசினார். இதன் காரணமாக அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் விளாசப்பட்டது.
இதன்பின்னர் சாம் கர்ரன் உடனடியாக அட்டாக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிற்க வைக்கப்பட்டார். அப்போது சாம் கர்ரனுக்கு அருகில் இருந்த கேமரா அவர் அருகே சென்று அவர் முகத்தை கொஞ்சம் க்ளோஸ் ஆங்கிலில் காட்டியது. இதனால் கோபமடைந்த சாம் கர்ரன், உடனடியாக தனது வலது கை மூலமாக கேமராவை தள்ளிவிட்டார். இந்த காட்சியும் ஒளிபரப்பாகிய நிலையில், சாம் கர்ரனை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.